குத்துச்சண்டை சாம்பியன் லவ்லினாவுக்கு அசாம் பேரவையில் பாராட்டு!

– ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்பு

டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் மாநில வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

75 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின் பார்க்கரை 5-2 என லவ்லினா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில், உலக சாம்பியன் பட்டம் வென்ற லவ்லினாவுக்கு அசாம்  சட்டசபையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துச் செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.

பின்னர் பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ”மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கையின் அடிப்படையில், குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற லவ்லினாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.

நாம் புதிய லவ்லினா மற்றும் ஹிமா தாசை (தடகள வீராங்கனை) உருவாக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதற்கான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

லவ்லினா பங்கேற்கும் அடுத்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? என்பதை இப்போது நாம் ஆராய வேண்டாம். நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை அவர் செய்திருக்கிறார்” என பாராட்டினார். 

You might also like