குடியரசு தினவிழா: முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு!

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 30-ம் தேதி நள்ளிரவு வரை பாதுகாப்பு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்பகுதிகளில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணி, முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல விமான நிலையத்தினை சுற்றிலும் 24 மணிநேரமும் ரோந்து பணி மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதோடு, பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பலகட்ட சோதனைக்குப்பிறகே விமானங்களில் ஏற்ற அனுமதித்து வருகின்றனர்.

விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக வர சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளை அறிவுறுத்தி உள்ளனர். 

You might also like