ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது!

நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தை விக்ரம், கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து திரையரங்கில் ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நினைக்க தோன்றுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம்கொள்ளும் நேரம்.

இந்த புத்துணர்ச்சி நீட்டிக்க வேண்டும். விக்ரம் பட சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது என்பது சந்தோசம் தான்.

அதைக் கொண்டாடத் தான் நான் இங்கு வந்துள்ளேன். ஆரோக்கியமான போட்டி இருப்பதில் தவறில்லை” என்று பேசினார்.

தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், ராஜராஜ சோழன் இந்து மதம் இல்லை என்று கூறிய கருத்து குறித்து கேட்கப்பட, அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன.

இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது.

அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை.

இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு.

இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலைத் திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களைக் கொண்டாடுவோம்” என்றார்.

You might also like