ஆதார்-பான் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம்!

ஒவ்வொருவரும் தன்னுடைய பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த இரு எண்களையும் இணைப்பதற்கு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வருமான வரித்துறை அலுவலகம் அவகாசம் அளித்தது. அதன் பிறகு அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.500 அபராதத்துடன் பான் எண், ஆதார் எண்ணை இணைக்க ஜூன். 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு அபராதம் ரூ.1000 என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.500 அபராதத்துடன் கூடிய காலக்கெடு இன்றுடன் முடிகிறது.

எனவே நாளை (1-ம் தேதி) முதல் இரண்டையும் இணைக்க அபராதம் ரூ.1000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்.

அதற்குள் இணைக்காவிட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாக மாறி விடும்.

அதன்பிறகு பான் எண்ணை எதிலும் பயன்படுத்த முடியாமல் போய் விடும் என்றும் வருமான வரித்துறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like