பள்ளி வாகனங்களில் சிசிடிவி கட்டாயம்!

– தமிழக அரசு உத்தரவு 

பள்ளி வேனில் சிக்கி மாணவர் உயிரிழந்ததையடுத்து, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் சிறப்பு விதிகள் 2012-ல் தமிழ்நாடு அரசு திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.

அதன்படி, அனைத்து பள்ளிப் பேருந்துகளின் முன்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்தை பின்னோக்கி நகர்த்தும் போது, பின்பகுதி முழுவதும் தெளிவாக தெரியும் அளவுக்கு, பேருந்தின் பின்பகுதியிலும் கேமரா பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் பின்பகுதியில் எச்சரிக்கை செய்யும் வகையில், சென்சார் பொருத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன விதிகளுக்கான இந்த வரைவு திருத்தத்தை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு திருத்தமானது மாநில அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என அரசு கூறி உள்ளது.

ஏதேனும் ஆட்சேபனை அல்லது பரிந்துரைகள் இருந்தால், ‘அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, தலைமைச் செயலகம், சென்னை’ என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும்.

You might also like