பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாதாந்திரத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.

இதனிடையே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாத காரணத்தால், ‘ஆன்லைன்’ வகுப்புகள் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் படிப்படியாக தொடங்கப்பட்டது. முதலில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கும், அதன் பின்னர் 6 முதல் பிளஸ்-1 வகுப்பு வரையிலும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.

கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், தொடர்ந்து மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டன. 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டதால், மாணவர்கள் தேர்வை சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும், இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ள பள்ளிக் கல்வித்துறைஅதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

தேர்வு மையங்கள், பறக்கும் படைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் நடந்தன.

இந்நிலையில், பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை மறுநாள் (6-ம் தேதி) தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 தேர்வு 10-ம் தேதி ஆரம்பித்து 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மொத்தம் 3,936 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை, 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 887 பேர், மாணவிகள் 4 லட்சத்து 68 ஆயிரத்து 587 பேர் ஆவார்கள்.

அதேபோல், பிளஸ்-1 பொதுத் தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். இதில், 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் அடங்குவார்கள்.

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷூ, பெல்ட் அணிந்து வரவும் அனுமதி இல்லை.

தேர்வின்போது, தேர்வு எழுதுபவர்கள் ஆட்சேபனைக்குரிய பொருட்களை வைத்திருந்து பயன்படுத்தி இருந்தால், அன்றையத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அடுத்த ஓராண்டு, அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும்.

தேர்வு எழுதுபவர், இன்னொருவரின் விடைத்தாளை பார்த்து எழுதினாலோ, அல்லது பிறரின் உதவியோடு தேர்வு எழுதினாலோ, அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஓராண்டு அல்லது அடுத்த இருபருவத் தேர்வுகளுக்கும் அதிகமான பருவங்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

ஆள்மாறாட்டம் செய்தால், அப்பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like