ஜூலை 17-ல் நீட் தேர்வு: தமிழக மாணவர்களின் நிலை?

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ம்தேதி) முதல் மே 7-ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவிக்கு வந்ததும் சட்டசபையில் மீண்டும் நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் தேர்வு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக தமிழக ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் ஜூலை 17-ம் தேதி நீட் நுழைவு தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தாண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

இந்தாண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசிடம் நீட் விலக்கு கேட்டு வற்புறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

You might also like