10, 12-ம் வகுப்புகளுக்கு 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தநிலையில், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிக் கூடங்களை திறக்க அரசு முடிவு செய்தது.

ஆனால் இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், ஒரு சில பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பெற்றோர், மாணவர்களுடன் 2-வது முறையாக கருத்து கேட்கும் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் 10, 12-ம் வகுப்புகளை திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் விருப்பம் தெரிவித்ததையடுத்து, தமிழக அரசு பள்ளிக்கூடங்களை வரும் 19-ம் தேதி திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில். “கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய்த் தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஜனவரி 6 முதல் 8-ம் தேதி வரை கருத்து கோரப்பட்டது.

இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறி முறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

12.01.2021 – 11.26  A.M

You might also like