காலச்சுவடு அரவிந்தன் மறைவு: எளிய அஞ்சலி!

யாரும் எதிர்பாராத வகையில் உயிரிழந்திருக்கிற காலச்சுவடு ஆசிரியப் பொறுப்பில் பங்கேற்று வந்த அரவிந்தனின் மறைவு, அவரை நன்கு உணர்ந்த நண்பர்களுக்கும் அவருடைய எழுத்தை வாசித்து வந்த வாசகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கும்.

திடீரென்று உயிரிழந்த அரவிந்தனுக்கு எளிய அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

பத்திரிகையாளராக தமது எழுத்து வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன்பே, தீவிர இலக்கிய பரிட்சயம் கொண்டவராக இருந்த அரவிந்தன், ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் முக்கிய பொறுப்பில் இருந்தபோது பல முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்.

‘இந்தியா டுடே’ நிறுவனம் இலக்கிய இதழ்கள் தயாரிப்பை நடைமுறைப்படுத்தியபோது அதை முன்னின்று செய்து பெரும் கவனிப்பைப் பெற்றவர்.

இதைத் தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதலும் மிக முக்கிய பொறுப்பை ஏற்று, தனது பங்களிப்பைச் சிறப்புற செய்தவர். அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் பரவலான வாசகர்களின் கவனத்தைப் பெற்றவைகளாக அமைந்திருந்தன.

அரசியல், இலக்கியம் என்று மட்டுமல்லாமல், ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற பல்வேறு விதமான தத்துவார்த்தப் பின்புலம் கொண்ட பலரைப் பற்றி மிக எளிமையான விதத்தில், சாதாரண வாசகர்களிடம் கொண்டு சென்றவர்.

சிறுகதைகளிலும் கவனம் செலுத்தி இருக்கிற அரவிந்தன் கொண்டு வந்த புதைமணல் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் பெரும் வாசகர் கவனத்தைக் கொண்டிருந்தன.

காலச்சுவடு, இந்து தமிழ் திசை, மின்னம்பலம், சமயம்.காம், நம் தோழி, நம்ம சென்னை முதலிய இதழ்களிலும் பணியாற்றினர்.

நாவல், சிறுகதை ஆகிய படைப்பிலக்கியத் துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வந்தார். சென்னையைக் களமாகக் கொண்டு அவர் எழுதிய ‘பொன்னகரம்’ நாவல் மிகுந்த கவனம் பெற்றது.

’பயணம்’ நாவலும் வேறுபட்ட களத்தைக் கொண்டது.

சிறுகதை எழுதுவதில் தனித்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் வெளியான ‘வெல்கம் டூ மில்லெனியம்’ தொகுப்பு அதன் நவீனக் கருப்பொருள்களுக்காக போற்றப்பட்டது.

நவீன இலக்கிய விமர்சனத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜெயகாந்தன் படைப்புகள் பற்றி அவர் எழுதிய நீண்ட கட்டுரை பல்வேறு விவாதங்களை எழுப்பியது. கிட்டத்தட்ட பத்துக் கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டில் தீவிர ஆர்வம் உடையவர். அது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் தனிநூலாகவும் வந்துள்ளன.

பாலசரஸ்வதி தேவி வாழ்க்கை வரலாறு, டி.எம்.கிருஷ்ணாவின் நூல்கள் உள்ளிடப் பத்துக்கும் மேற்பட்டவற்றை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். செம்மையாக்கத்தில் நல்ல அனுபவம் உள்ளவர்.

இலக்கியத் தளத்திலும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்த அரவிந்தன், கடைசியாக காலச்சுவடு இதழின் ஆசிரியக் குழுவில் பங்கேற்று காலச்சுவடு தயாரித்து வந்த புத்தகங்களின் உருவாக்கத்திலும் சிறப்பான பங்களிப்பை செய்து வந்தார்.

எழுத்துலகில் இயங்கி வந்தபோதும், சுந்தர ராமசாமி உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளுமைகளுடன் நெருங்கிய நட்பில் தொடர்ந்து அரவிந்தன் இருந்து வந்தார் என்பது முக்கியமானது.

மிக சமீபத்தில் புதிய தலைமுறையின் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்று அரசியல் குறித்த தன்னுடைய பார்வையை மிக சமீபத்தில் முன்வைத்து வந்தவர்.

அரசியல், சமூகம், இலக்கியம், மொழிபெயர்ப்பு என்று பல்வேறு தளத்தில் தொடர்ந்து இயங்கி வந்தவரான அரவிந்தனின் இழப்புக்கு அவருடன் நீண்ட காலமாகப் பழகியவன் என்கிற முறையில், ஆத்மார்த்தமான எளிய அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று அதிகாலை தூக்கத்திலேயே மாரடைப்பினால் உயிரிழந்த அரவிந்தனின் உடல் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை பிற்பகலுக்குப் பிறகு நல்லடக்கம் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

– மணா

You might also like