செய்தி:
பாஜக அரசை கண்டித்து நாளை நடைபயணம்.
– காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
பொதுவாக சுகர் அதிகரிக்கிறது என்றால் மருத்துவர்கள் வாக்கிங் போகச் சொல்லி, பாதிக்கப்பட்டவர்களும் வாக்கிங் போவார்கள். இதுதான் வழக்கம்.
அரசியல்வாதிகளுக்கும் குறைவில்லாமல் சுகர் இருக்கிறது, பிரஷரும் இருக்கிறது. அரசியல் அழுத்தமும் இருக்கிறது. அதனால்தான் அவர்களும் கூட்டத்தோடு நடைபயணம் போகிறார்கள்.
அண்மையில் திருச்சியிலிருந்து மதுரை வரை நடைபயணம் போனார், நடைபயணத்தில் நடந்தே புகழ்பெற்றவரான வைகோ.
பல கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக ஒரு பிரிவின் தலைவரான அன்புமணி நடைபயணம் போனார். சௌமியா அன்புமணியும் நடைபயணம் போனார்.
அண்ணாமலையும் தன் பங்கிற்கும், ‘தேசிய’ பங்கிற்கும் சேர்த்து நடைபயணம் போயிருக்கிறார்.
அப்படி இருக்கும்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை சும்மா இருப்பாரா அவரும் தேசிய உணர்வுடன் சென்னைக்கு அருகிலேயே மிகச் சுருக்கமாக நடைபயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
சுகரும் பிரஷரும் இருக்கிற அரசியல்வாதிகள் தேர்தலும் நெருங்கி வருவதால், கொடிகளோடும் கோஷத்தோடும் கால் வலித்தாலும் உற்சாகமாக நடக்கலாம்!