நடிப்பு, பாட்டு, தயாரிப்பு என பன்முகத் திறமை கொண்ட பி.யு. சின்னப்பா, சிறு வயது முதலே நாடக நடிகரான இவரது தந்தையைப் பார்த்து பாடவும் நடிக்கவும் கற்றுக் கொண்டார்.
இதனால், அதிகம் படிப்பில் நாட்டம் செல்லாத நிலையில் குடும்ப வறுமை காரணமாக நூல் கடை ஒன்றில் வேலைக்கு சேர்த்து விடப்பட்டார்.
ஆனால், அது அவருக்கு பிடிக்காமல் நாடக நிறுவனம் ஒன்றில் சேர முயற்சித்து டி.கே.எஸ் சகோதரர்கள் நடித்து வந்த நாடக நிறுவனத்தில் சேர்ந்தார்.
அங்கு அவருக்கு சிறு சிறு வேடங்களை கொடுத்த நிலையில், அதைத் தொடர்ந்து மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் மாதம் 15 ரூபாய் சம்பளத்திற்கு நாடக நடிகராக சேர்ந்தார்.
அந்த நிறுவனத்தின் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் பெற்றார். இவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்கள் தான் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, பிஜி வெங்கடேசன் ஆகியோர்.
நாடக நிறுவனத்தை விட்டு பின்னர் வெளியேறிய பி.யு.சின்னப்பா அவர்களுக்கு முதல் முதலாக சந்திரகாந்தா என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
1936-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இளவரசன் கதாபாத்திரத்தில் பி.யு.சின்னப்பா அவர்கள் நடித்திருப்பார்.
அதன் பிறகு 1938-ம் வருடம் பஞ்சாப் கேசரி, அனாதை பெண், யயாதி போன்ற படங்களில் நடித்த இவருக்கு குறிப்பிடும்படியான படமாக அமைந்தது 1940-ம் ஆண்டு வெளிவந்த உத்தம புத்திரன்.
இந்தப் படத்தில் பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதன் மூலம் தமிழ்த் திரை உலகில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தவர் என்ற பெருமை பி.யு.சின்னப்பா அவர்களுக்கு கிடைத்தது.
டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த உத்தம புத்திரன் படத்தில் பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அதன் பிறகு பி.யு.சின்னப்பா 1942-ம் வருடம் மனோன்மணி என்ற படத்தில் நடிக்க அது அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து 1944-ம் வருடம் பிரித்திவிராஜ் என்ற படத்தில் நடித்த பி.யு.சின்னப்பா அந்தப் படத்தில் தன்னுடன் நடித்த சகுந்தலா என்பவரையே திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியின் மகன் தான் ராஜா பகதூர். 1944-ம் ஆண்டு வெளியான ஜகதலப்பிரதாபன் படத்தில் பிரதாபனாக நடித்த பி.யு.சின்னப்பா ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அசத்தியிருப்பார்.
அதேபோன்று பி.யு.சின்னப்பா அவர்கள் மூன்று வேடங்களில் நடித்த மங்கையர்கரசி திரைப்படத்தில் இவர் பாடிய “காதல் கனிரசமே..” பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்று கூறலாம்.
தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட பி.யு.சின்னப்பாவை, தமிழ் சினிமா இந்த உலகத்திற்கு வழங்கிய கொடைகளில் மிகப்பெரிய கொடை என பாடலாசிரியர் வாலி அவர்கள் ஒரு பேட்டியின்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
– ஆதி தேவன்
நன்றி: தமிழ் மினிட்ஸ்