வருகிறது ட்ரம்ப் மொபைல்: அமெரிக்க அதிபரின் புதிய பிசினஸ்!

அரசியலுக்கு வரும் முன்பே தொழிலதிபராக இருந்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ரியல் எஸ்டேட் நிறுவனம், கட்டுமானத் தொழில், தனியார் விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை அவர் செய்து வந்தார்.

ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, அந்த தொழில் நிறுவனங்களை அவரது மகன்கள் கவனித்து வருகிறார்கள். ட்ரம்பின் மகன்களில் ஒருவரான எரிக் ட்ரம்ப் இந்த நிறுவனத்துக்கு இப்போது தலைவராக உள்ளார்.

இந்த சூழலில் இப்போது புதிதாக மொபைல் போன்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க ட்ரம்பின் குடும்பம் திட்டமிட்டுள்ளது.

‘ட்ரம்ப் மொபைல்’ என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதுடன், 5ஜி சேவையை வழங்கும் நிறுவனத்தையும் தொடங்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ட்ரம்ப் நிறுவனத்தின் சேவையைப் பெற மாதாந்திர கட்டணமாக 47.45 டாலர் வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல் ட்ராம்ப் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விலை 499 டாலர்களாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை தொடங்குவதற்காக காப்புரிமை அலுவலகத்திலும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 12-ம் தேதி இந்த தொலைபேசி மற்றும் தொலைதொடர்பு சேவை நிறுவனத்துக்கான காப்புரிமையைக் கோரி ட்ரம்பின் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இவர்கள் ஆரம்பிக்கும் கைப்பேசி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு டிரம்ப் மற்றும் டி1 என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான காப்புரிமை கிடைக்கும் பட்சத்தில், கைபேசி, பேட்டரி சார்ஜர், வயர் இல்லாத டெலிகாம் சேவைகளை டொனால்ட் டிரம்ப் தொடங்க முடியும்.

டிரம்ப் கைபேசி தயாரிக்க விண்ணப்பித்ததற்கான தகவலை சமூக வலைதளத்தில் காப்புரிமை அட்டார்னி ஜோஸ் கெர்பன் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும் சூழலில், அவரது நிறுவனம் தொலைபேசி சேவை வணிகத்தில் நுழைந்திருப்பது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்பின் அமெரிக்க அதிபர் பதவியை அவரது நிறுவனம் தவறான முறையில் பயன்படுத்த நேரிடலாம் என்றும், அது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், தொலைபேசி நிறுவனங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்றும் பலரும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே அமெரிக்காவில் டி-மொபைல் என்ற பெயரில் காப்புரிமை பெறப்பட்டிருப்பதால், டொனால்ட் ட்ரம்பின் நிறுவனம் டி1 என்ற பெயரை பயன்படுத்த சட்டபூர்வமாக சவால்கள் இருக்கும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்நிறுவனம் டொனால்ட் டிரம்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ட்ரம்ப் தனது நிறுவனத்துக்கான ஸ்மார்ட் போன்களை எங்கு தயாரிப்பார் என்ற கேள்வியும் பெரிய அளவில் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் இப்போதைக்கு ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் வசதி பெரிய அளவில் இல்லை. எனவே ட்ரம்பின் நிறுவனத்துக்கு தேவையான ஸ்மார்ட் போன்களை வெளிநாடுகளில்தான் தயாரித்தாக வேண்டிய நிலை உள்ளது.

உள்ளூரிலேயே அனைத்துப் பொருட்களையும் தயாரிக்க வேண்டும். மாறாக வெளிநாடுகளில் பொருட்களை தயாரித்தால் அந்த பொருட்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று கண்டிப்பு காட்டி வருகிறார் டொனால்ட் ட்ரம்ப்.

இப்போது தன் நிறுவனத்துக்கும் இதே கண்டிப்பை ட்ரம்ப் காட்டுவாரா என்ற கேள்வியும் அமெரிக்காவில் பெரிய அளவில் எழுந்துள்ளது.

இந்த விமர்சனங்களுக்கு டொனால்ட் ட்ரம்பின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

– பி.எம். சுதிர்

You might also like