இந்தியாவை அதிரவைத்த சில விமான விபத்துகள்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் நேற்று (12.06.2025) மதியம் 1.40 மணியளவில் விபத்திற்குள்ளானது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது.

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில், விசாரணைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியில் 7-க்கும் மேற்பட்ட மாணவர்களும் உயிரிழந்ததாகவும் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.

இதுபோன்று துரதிர்ஷ்டவசமாக பல பயங்கரமான பயணிகள் விமான விபத்துக்களை இந்தியா சந்தித்துள்ளது, அவற்றில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. அவற்றில் சில முக்கியமான விபத்துக்களின் பட்டியல்:

5ஏர் இந்தியா விமானம் 855 (ஜனவரி 1, 1978): மும்பையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அரபிக் கடலில் ஒரு போயிங் 747 விமானம் விழுந்து நொறுங்கியது.

ஒரு பழுதான கருவி மற்றும் Spatial Disorientation எனப்படும் திசையைக் கணிப்பதில் ஏற்படும் குழப்ப நிலையால் விமானி பாதிக்கப்பட்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டது, இதில் 213 பேரும் உயிரிழந்தனர்.

ஏர் இந்தியா விமானம் 182 (ஜூன் 23, 1985): இந்த விபத்து அயர்லாந்து கடலோர சர்வதேச கடல் பகுதியில் நடந்தாலும், இது ஒரு இந்திய விமான நிறுவனம் சம்பந்தப்பட்டது. இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மாண்ட்ரீலில் இருந்து டெல்லிக்குச் சென்ற இந்த போயிங் 747 விமானம், சீக்கிய தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு காரணமாக நடுவானில் வெடித்து. இதில் இருந்த 329 பேரும் உயிரிழந்தனர். இது உலகளவில் மிகவும் மோசமான விமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 113 (அக்டோபர் 19, 1988): இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக அகமதாபாத்தில் தரையிறங்க முயற்சிக்கும்போது விபத்துக்குள்ளானது, இதில் 130 பேர் உயிரிழந்தனர்.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 605 (பிப்ரவரி 14, 1990): இந்த ஏர்பஸ் A320 பெங்களூரு விமான நிலையத்தை அணுகும் போது விபத்துக்குள்ளானது. ரன்வேயை தாண்டிச் சென்ற இந்த விமான விபத்தில் இதில் 92 பேர் உயிரிழந்தனர்.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 257 (ஆகஸ்ட் 16, 1991): இந்த விமானம் இறங்கும் போது இம்பால் அருகே ஒரு மலையில் மோதி, அதில் இருந்த 69 பேரும் உயிரிழந்தனர்.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 491 (ஏப்ரல் 26, 1993): அவுரங்காபாத்தில் இருந்து புறப்படும் போது ஒரு போயிங் 737 விமானம் ஒரு டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. மொத்தம் 55 பேர் உயிரிழந்தனர்.

சர்க்கி தாத்ரி விபத்து (நவம்பர் 12, 1996): இது விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகவும் மோசமான நடுவானில் நிகழ்ந்த மோதலாகக் கருதப்படுகிறது. சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் போயிங் 747 மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் இலியுஷின் Il-76 ஆகியவை ஹரியானாவின் சர்க்கி தாத்ரிக்கு அருகே மோதிக்கொண்டன. இதில் இரண்டு விமானங்களிலும் இருந்த 349 பேரும் உயிரிழந்தனர்.

அலையன்ஸ் ஏர் விமானம் 7412 (ஜூலை 17, 2000): பாட்னா விமான நிலையத்திற்கு அருகில் ஒரு சிறிய டர்போப்ராப் விமானம் எஞ்சின் கோளாறு மற்றும் விமானிகளின் தவறான கையாளுதல் காரணமாக ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் 60 பேர் (விமானத்தில் இருந்த 55 மற்றும் தரையில் இருந்த 5 பேர்) உயிரிழந்தனர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 (மே 22, 2010): மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒரு போயிங் 737 ரன்வேயை தாண்டி சென்று பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344 (ஆகஸ்ட் 7, 2020): இந்த போயிங் 737-800 கேரளா, கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் கனமழையின் போது தரையிறங்கும் போது ரன்வேயை தாண்டிச் சென்றது. இதில் இரண்டு விமானிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

– நன்றி : புதிய தலைமுறை

You might also like