‘பேரன்பும் பெருங்கோபமும்’ பேசும் சாதி மறுப்பு அரசியல்!

தமிழ் பாலன்

பொதுவாகத் திரையரங்குகளுக்கு செல்வதில்லை என்றாலும் சில நேரங்களில் நண்பர்களோடு திரைப்படங்களை பார்ப்பது வழக்கம்.

சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்கள் பார்க்க நேர்ந்தது.

ஒன்று கமலின் ‘தக் லைஃப்’.

இந்தப் படம் கமல் மீதிருந்த சிறந்த திரைப்படக் கலைஞன் என்ற நம்பிக்கையை முற்றிலும் தகர்த்து விட்டது.

வாழ்நாளில் இதுபோன்ற ஒரு மோசமான படத்தை, பல ஆயிரம் கோடி முதலீடு செய்து மணிரத்தினம் இணைந்து படைத்திருக்கிறார் என்றால் தமிழக மக்களை இவர்கள் முட்டாளாக்க முழு முயற்சி செய்துள்ளார்கள் என்று பார்க்க இயலுகிறது.  

மற்றொரு படம் – பேரன்பும் பெருங்கோபமும்.

இந்தப் படம் ஒரு சிறந்த கருத்தாக்கத்தின் சீரிய முயற்சி. தங்கர்பச்சானின் மாறுபட்ட சிந்தனை இந்தப் படைப்பில் மிளிர்கிறது.

சாதியத்தின் வேர்களில் இருந்து சமூகம் விடுபடுவது என்பது எளிதானது அல்ல.

சாதியத்தின் வீரியங்களை மூடநம்பிக்கைகளால் கட்டமைக்கப்பட்ட அதன் உள்ளார்ந்த பொருள் குறித்த புரிதலை மக்களிடையே உருவாக்குவதற்கான ஒரு கற்பனை இந்தப் படம்.

இந்தப் படத்தில் கதாநாயகன் கடைப்பிடிக்கும் உத்தி சட்டத்தின் அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் மருத்துவக் கோட்பாட்டின் அடிப்படையிலும் ஏற்கத்தக்கதல்ல.

எனினும் இந்தப் படம் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள் இதுபோன்ற சூழல்களை உருவாக்கும் என்பதும் தவிர்க்க இயலாது.

இன்று கூட வளர்ந்த சமூகங்களில் உயர்பதவியில் இருப்பவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக உயர் நிலையில் இருப்பவர்கள் சாதியத் தடைகளை மீறி நடைபெறும் மண உறவுகளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதுவும் அவர்கள் அனுபவித்து வரும் பதவி மற்றும் பொருளாதார ரீதியாக நிலை பெற்றுள்ளவர்களில் மிகப் பெரும்பாலோர் தங்களின் அந்தஸ்து மற்றும் பொதுமக்கள் இடையே உள்ள பிம்பம் பாதிப்பிற்கு உள்ளாகிவிடுமோ என்ற அச்சம் உருவாக்கிய சூழ்நிலையின் எதார்த்தங்களே அதுபோன்ற நபர்களை சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

அறியாமையில் உழலும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையாத மக்கள் தங்களது சாதிகளில் இன்னும் சாதிய அடையாளம் தக்க வைக்கப்படுவதை விரும்புகின்றனர். அந்த சமூகத் தளைகளை மீறி அவர்களால் வர இயல்வதில்லை.

அவர்கள் சாதியத்தை மீறிய திருமண உறவுகளை ஏற்றுக்கொள்வது எளிதான ஒன்றாகக் கருதுவதில்லை.

வேறு சாதிகளில் திருமணம் செய்து கொண்டவர்கள், முறையான வாழ்க்கையை இறுதிவரை வாழ்கிறார்களா இல்லையா?.

அல்லது சுயசாதிக்குள் திருமணம் செய்து கொண்டு இறுதிவரை இணையர்களாக திகழ்கிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மை.

அதற்கு முதிர்ச்சியின்மையே காரணமாக நிகழ்கிறது.

உலகமயமாக்கப்பட்ட பண்பாட்டில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை, எல்லைகளைத் தாண்டி வெளிநாடுகளில் வாழ்கின்ற சூழல் உருவாகும்போது அங்கு வளர்ந்து வரும் தலைமுறைகள் சாதியத்தை இழிவாக கருதுவார்கள்.

பெற்றோர்களால் அவர்கள் மனதில் சாதியப் பெருமை திணிக்கப்பட்டாலும்கூட பல்வேறு நாடுகளின் பண்பாட்டுக் கூறுகளை அறிவுபூர்வமாக அணுகும் சூழல் அவர்களை முற்றிலும் மாறுபட்ட சுய சிந்தனையாளர்களாக உருவாக்குகிறது.

பார்ப்பனியம் மற்றும் வெளிநாடுகளில்கூட பார்ப்பனிய பண்பாட்டை தங்களிடைய தக்கவைத்துக் கொண்டாலும்கூட அந்தந்த நாடுகளின் தன்மைக்கு ஏற்ப மண உறவுகளைப் பொறுத்தவரை வேற்று சாதி அல்லது வேற்று இன திருமணங்களை நிராகரிப்பதில்லை. மாறாக அவர்களோடு அனுசரித்து செல்கின்றார்கள்.

மெல்ல மெல்ல அதே நிலை ஏனைய சாதிகளுக்குள் வெளிநாடுகளைப் பொருத்தவரை உருவாகி வருகிறது.

சாதியத்திற்குள் உலா வரும் பல சாதியத் தலைவர்களுக்கு இந்த திரைப்படம் சவுக்கடி கொடுக்கிறது.

இந்தப் படத்தால் சாதியம் முடிவுக்குவரப் போவதில்லை. சாதியத்தை ஒழிப்பது இப்போதைக்கு இயலாத ஒன்று.

இதுபோன்ற பல காரணிகள் சாதியம் முடிவதற்கு தடையாக இருந்தாலும் மக்களுக்கு ஒரு புதிய பார்வையை தயாரிப்பாளர் தங்கர் பச்சானும் இயக்குநர் சிவப்பிரகாஷும் இந்த திரைப்படம் மூலம் கூற முயன்று இருக்கிறனர்.

பல அரசியல் தலைவர்கள் இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளார்கள்.

நிச்சயமாக சாதியத்தைப் போற்றும் பலர் இவற்றை அரசியலுக்காக இந்தத் திரைப்படத்தை வரவேற்று ஏற்றுக்கொண்டாலும்கூட, உளவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

சாதியப் பெருமை உளவியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட பெரும் பொய். அது சுயசாதிப் பெருமிதம் என்ற முலாம் பூசி மெருகேற்றப்பட்ட ஒரு நிலைப்பாடாகும்.

ஒவ்வொரு சாதியும் அதே நிலைப்பாட்டை மேற்கொள்ள முயலும்போது ஒருவரை ஒருவர் சிறுமைப்படுத்திக் கொள்வதும் அவர்களை அவர்களே பெருமையாகக் கூறிக் கொள்வதும் ஒரு தொடர் நடைமுறையாகும்.

சனாதன சதியினால் உருவாக்கப்பட்ட பொய்மையின் களைகள் சாதிய சமூகமாக பரிணமித்தது என்பது வரலாறு. இது சமூகவியல் மற்றும் மானுடவியல் அறிந்தவர்களின் கூற்றுமாகும். இதுகுறித்து ஆய்வுக் குறிப்புகள் ஏராளமாக உள்ளது.

நாடுகளின் தன்மைக்கேற்ப இனக் குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள் பிரிவு பெற்ற சமூகங்களாக வாழ்ந்தபோது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடந்த பல்வேறு பண்பாட்டு பரிணாமங்கள் சாதிய வடிவில் நிலைபெற்று இருந்தது.

பார்ப்பனியம் அதை தக்க வைத்துள்ளதன் மூலம் பெரும் பயன்பெற்றது. படிநிலை சமூக அமைப்பு என்பது பார்ப்பனியத்திற்கு மிகவும் சாதகமாக இருந்தது. பிறப்பையும் சாதியையும் நினைத்தது மனு சாஸ்திரம்.

இவற்றின் இருந்து முளைத்தெழுந்த உருமாறிய பின்னாளில் சாதிகளாக மாறியது.

ஆகவே சாதிகள் வர்ணங்களின் அடிப்படையில் இணைக்கப்பட்டது.

சனாதான மூடநம்பிக்கையில் இவற்றை இணைத்து விட்டு தங்களது நலன்களைப் பார்ப்பனீயம் பேணிக்கொண்டது.

வாக்கு வங்கி அரசியலை சாதியே தீர்மானிக்கும் ஒரு சூழலை இந்த ஜனநாயக அமைப்பில் நிலை பெறுவதற்கான சூழல் உருவாக்கப்பட்ட சதியாகும்.

பிறப்பினால் உயர்வு என்ற மேலாதிக்கக் கோட்பாட்டின் அடிப்படையை வேர்களாகக் கொண்டு இணைக்கப்பட்ட நம்பிக்கையில் இருந்து வடிவம் பெற்ற இந்து மதத்தில் இது முழுமையாகப் பரவி இருந்தாலும் கூட கிறித்துவத்திலும் பெரும்பாலும் அதே நிலை தான் தொடர்கிறது.

கிருத்துவ குருமார்கள் கூட சாதியின் அடிப்படையில் சாதிய உணர்வுகளின் அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்பது மறுக்க இயலாத ஒன்று.

இஸ்லாமிய மரபுகளில் இது பெரிதும் கடைப்பிடிக்கவில்லை என்றாலும் கூட அதன் சுவடுகள் மதம் மாறியவர்கள் இடையே இல்லை என்று மறுக்க இயலாது.

இந்த சாதியம் என்ற நோய் இந்தியச் சமூகத்தின் நீடித்து நிலைப்பெற்றுள்ள நீண்ட கால நோயாகும்.

சாதிய உணர்வு என்பது முழுவதும் மாற்றி அமைக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட மனநிலையாகும்.

கற்றறிந்த பெருமக்கள் பலர் துறை சார்ந்த அறிவாளிகளாக இருந்தாலும்கூட சாதியம் என்று ஒன்றிலிருந்து அவர்களால் மீள இயலவில்லை. மிகச் சிலர் மட்டுமே இதிலிருந்து மாறுபட்டவர்கள்.

கிராமங்களே சாதிகள் வளர்வதற்கான வளமான களங்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனம்.

கிராமங்களில் இருந்து நகரத்திற்கு குடி புகுந்தாலும்கூட கிராமங்களுக்குள் செல்லும்போது சாதியத்தை சுமந்து கொண்டுதான் செல்ல இயலும்.

இதுதான் இன்றைய சமூகத்தின் எதார்த்தம்.

இந்தச் சூழலை மாற்றுவதற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பமும் காலமாற்றங்களில் உருவாகும் அறிவியல் வளர்ச்சியும் துணை புரியும்.

எல்லாப் படங்களிலும் போல இந்தப் படத்திலும் இளையராஜாவின் இசை, காட்சிகளின் தன்மைக்கேற்ப மக்கள் மனதை நெகிழ வைக்கிறது.

கதையின் நாயகனும் நாயகியும் எல்லைக்கோடுகளுக்கு ஏற்ப கதாபாத்திரங்களின் தன்மையை சரியாக உணர்த்துகிறார்கள்.

சில காட்சிகள் வன்முறை சித்தரிப்புகளாக இருந்தாலும் திரைக்கதையின் வடிவமைப்புக்கு அது சற்று குரூரமாகக் காட்டப்பட்டுள்ளது.

ஏனைய நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரங்களில் தங்களது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் நலமாக இருக்கும்.

இதுபோன்ற ஒரு சிறந்த திரைப்படத்தை மக்கள் முன் வைத்த இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற சில முக்கியமான உரையாடல்கள் ஒலிப்பதிவாக பகிரப்பட்டுள்ளது.

You might also like