சமூகப் பிரச்சனையொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, அதனை ‘ஹீரோயிசம்’ தெறிக்கிற வகையில் திரையில் கதை சொல்வது ஒரு சாகசத்திற்குச் சமம். அதன் உள்ளடக்கம் யதார்த்தத்தில் வெளிப்பட முடியாதது என்றபோதும், ‘அப்படித்தான் நிகழ்கிறது’ எனும்படியாகத் திரையில் கதை சொல்லப்பட வேண்டும்.
இயக்குனர் தங்கர்பச்சான் மகன் விஜித், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், தீபா சங்கர், சுபத்ரா ராபர்ட் உள்ளிட்ட பலர் நடிப்பில், புதுமுக இயக்குனர் சிவபிரகாஷ் தந்திருக்கிற ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படம் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறதா?
‘பே.பெ.’ கதை என்ன?
தேனி வட்டாரத்தைச் சேர்ந்த கிராமமொன்றில் வாழ்ந்து வருகிறார் ஜீவா (விஜித் பச்சான்). கோயில் திருவிழா நடந்து கொண்டிருக்கும்போது, தனது சாதியைச் சேர்ந்த ஒரு பெண் வேறு சாதியைச் சேர்ந்த ஆணோடு ஊரை விட்டுச் செல்லத் துணை நிற்கிறார். ஆனால், அவ்விஷயம் அறிந்து அவர்களை இழுத்து வருகின்றனர் ஊர்க்காரர்கள்.
அந்த ஆணைக் கொலை செய்து எரித்துவிட்டு, அந்த பெண்ணுக்கு விஷம் கொடுக்கின்றனர். ஆனால், அவர் மரணமடையவில்லை. மாறாக, புத்தி பேதலித்து ஊருக்குள் நடைபிணமாக உலவுகிறார்.
அதையடுத்து, ஜீவாவின் தாய் (சுபத்ரா ராபர்ட்) அவரை மாஹேவுக்கு அனுப்புகிறார்.
அங்கு ஹோட்டலொன்றில் வேலை செய்தவாறே நர்சிங் கல்லூரியில் படிக்கிறார் ஜீவா. அப்போது அறிமுகமாகும் நட்பு வட்டத்தில் இணைகிறார் அப்பகுதியைச் சேர்ந்த சாரா (ஷாலி நிவேகாஸ்). மெல்ல அவர்களது நட்பு எல்லை தாண்டுகிறது.
ஒருகட்டத்தில் சகோதரியின் கணவரே தன்னை மணப்பதில் உறுதி காட்டுவது கண்டு குலைந்து போகிறார் சாரா. அந்த நேரத்தில், அவருக்குத் துணை நிற்க முடியாமல் ஜீவாவைத் தடுக்கிறது சொந்த ஊரில் தான் கண்ட ஆணவக் கொலைகள்.
அதையும் மீறி, சாராவின் காதலை ஜீவா ஏற்கிறார். ஒருகட்டத்தில் அவருக்குத் தாலி கட்டி தனது கிராமத்திற்கு அழைத்து வருகிறார். ஆனால், அவரது பெயர் மஞ்சு எனப் பொய் சொல்கிறார். என்ன சொன்னாலும், ஜீவாவின் தாய் சாராவை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
இறந்து போன தந்தையின் பணியைப் பெற ஒருபக்கம் ஜீவா முயற்சித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மஞ்சுவாக வாழும் சாரா அக்கிராமத்து மக்களின் சந்தேகப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்.
இந்த நிலையில், சாரா கர்ப்பமடைகிறார். அதற்குள், சாராவை உயர் சாதிப் பெண் என்று நினைத்து உறவு பாராட்டத் தொடங்குகிறார் ஜீவாவின் தாய்.
திடீரென்று ஒருநாள், மாஹேவில் இருந்து வந்த ஒரு லாரி ஓட்டுநரால் சாராவின் உண்மையான அடையாளம் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
மேற்சொன்னவை நிகழ்ந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஜீவா ஒரு மருத்துவமனையில் ஆண் நர்ஸ் ஆக வேலை பார்ப்பதாகக் காட்டுகிறது திரைக்கதையின் தொடக்கம்.
அங்கு ஒரு குழந்தை காணாமல் போன வழக்கில் அவரைக் கைது செய்கின்றனர் போலீசார். அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். ஜீவா அந்தக் குழந்தையைக் கடத்தினாரா, இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியும் முன்பே, சில வில்லன்களும் திரையில் வந்து போகின்றனர்.
நாயகனான ஜீவாவின் வாழ்வில் அவர்கள் நடத்திய திருவிளையாடல்கள் என்ன என்பது பிறகு சொல்லப்படுகிறது.
மேற்சொன்ன நிகழ்வுகளைத் திரைக்கதையாகக் காட்டும்போது, ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ வகைமையில் அமைந்த கமர்ஷியல் திரைப்படமாக மாற்ற முயன்றிருக்கிறார் இயக்குனர் சிவபிரகாஷ். ஆனால், அது முழுதாகப் பலன் அளிக்கவில்லை.
உள்ளடக்கத்தில் நிறைவா?
நாயகனாக வரும் விஜித் பச்சான் இன்னொரு விஜய் ஆண்டனி போன்று திரையில் காட்சியளிக்கிறார். சீரியசாக தென்படும்போது கவனம் ஈர்ப்பவர், ரொம்பவே ஜாலியான வாலிபராகத் தோற்றம் தரும்போது சாதாரணமாகத் தெரிகிறார். அவரைத் தாடியுடன் காட்டினால்தான் ‘மெச்சூர்டு’ ஆக தெரியும் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார் போல..!
நாயகி ஷாலி நிவேகாஸ் இளமை ததும்ப வந்து போயிருக்கிறார். அவரது நடிப்பு ஓகே. சில இடங்களில் அவர் பேசுகிற மலையாள வசனங்கள் செயற்கையாகத் தெரிகின்றன.
இந்த படத்தில் தீபா சங்கர், கீதா கைலாசம், அருள்தாஸ், மைம் கோபி உட்படப் பலர் நடித்திருக்கின்றனர். சாய் வினோத் மற்றும் தக்ஷா ஆகியோர் திரையில் வருகிற வழக்கமான போலீஸ் அதிகாரிகளாக விறைப்பும் முறைப்புமாகத் திரிகின்றனர்.
விஜித்தின் தாயாக வரும் சுபத்ரா ராபட்டுக்கு இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் இடம் தந்திருக்கலாம். வேறு சில பாத்திரங்கள் ‘இன்னும் கொஞ்சம் இவர்களைத் திரையில் காட்டியிருக்கலாம்’ என்பது போல வந்து போயிருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமாரின் ஒளிப்பதிவில் மாஹே எனும் தலம் புதிதாகத் தெரிகிறது.
படத்தொகுப்பாளர் ராமர் இப்படத்தின் இயக்குனர் சொன்னபடி காட்சிகளைத் தொகுத்திருக்கிறார். இதே கதையை ‘நான்லீனியர்’ முறையில் சொல்ல முற்பட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம். அதனை இயக்குனர் தவறவிட்டிருக்கிறார்.
கலை இயக்குனர் சரவணன், ஒலிக்கலவையைக் கையாண்ட தபஸ் நாயக் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
இயக்குனர் சிவபிரகாஷ் ஆணவக்கொலைகள் மற்றும் சாதீய ஆதிக்கத்தின் பிடியில் இருந்து சமூகத்தை விடுவிக்கத் தீர்வொன்றை முன்வைத்திருக்கிறார். வளர்ப்பு மட்டுமே சாதி, மத ஆதிக்கத்திற்குத் துணை நிற்பதாகச் சொல்லியிருக்கிறார். அந்த கருத்து செறிவுறச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில், கமர்ஷியல் படத்திற்கே உரிய சுதந்திரத்தோடு அது இக்கதையில் கையாளப்பட்டிருக்கிறது.
இந்தக் கதையில் சம்பந்தப்பட்ட சாதியினர் என்று படத்தில் காட்டப்படுகிற அடையாளங்கள், சில எதிர்க்கருத்துகளுக்கு வித்திட வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட விமர்சனங்களுக்குப் படக்குழு என்ன பதில் வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை.
படம் ரயிலில் நிகழும் ஒரு கொலையிலிருந்து தொடங்குகிறது. அதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன்பு எனத் தாவுகிறது. நடுவே, சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்று பிளாஷ்பேக் காட்டப்படுகிறது. இந்த குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம் அல்லது நான்லீனியர் முறையில் கூட இத்திரைக்கதையை மாற்றியிருக்கலாம்.
சரிவரத் திரைக்கதையைச் செப்பனிடாமல் தந்த காரணத்தால் மிகச்சிறப்பான கவனிப்பைப் பெறக் கூடிய கமர்ஷியல் படத்திற்கான உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிற வாய்ப்பு பறி போயிருக்கிறது.
அதேநேரத்தில், வித்தியாசமான கதையொன்றை ரசிக்க வேண்டுமென்பவர்களுக்கு இப்படம் தரும் அனுபவம் ஓரளவுக்கு திருப்தியைத் தரும்.
போலவே, பெருங்கோபத்தை நாயகன் வெளிப்படுத்தியது எப்படி என்று சொன்ன இயக்குனர், அவரையோ மற்றும் அவரைச் சார்ந்தவர்களையோ பேரன்பு கொண்டவர்களாகக் காட்டவில்லை. இப்படித்தான் சில டைட்டில்கள் நம்மை எதிர்பார்ப்புக்கு உட்படுத்தி ஏமாற்றுகின்றன.
- உதயசங்கரன் பாடகலிங்கம்