தடையாக எவர் வரினும் கலங்காதீர்!

மக்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தப் பற்பல அறிஞர்கள் அரிய பெரிய வேலை செய்தனர். ஆனால், அடிப்படையை ஆராயாததால் அவர்கள் யாவரும் தோற்றனர். 

எனவே இளந்தோழர்களே! வருங்கால உலகம் உங்களைத்தான் நம்பியிருக்கிறது. ஆகவே நீங்கள் உங்களுக்கு அளித்துக் கொள்ளும் நல்ல தீர்ப்பால் இனத்தை எதிர்காலத்திலே எழுச்சியுறச் செய்வீர்களாக!

பெரியோர்களை நம்பின காலம் போய்விட்டது. புதுமை, இளைஞர்களால்தான் நிகழ வேண்டும். நிகழ முடியும். சீனாவிலே சன்யாட்சென், இளைஞர்கள் உதவியால் தான் பழைய சீனாவை மடித்துப் புதிய சீனாவை உண்டாக்கினார்.

ஐரோப்பாவின் நோயாளியாகக் கருதப்பட்ட துருக்கி இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் கமால் பாஷா இளைஞர்கள் உதவியைப் பெற்றதாலேதான்.

தோழர்களே! நீங்கள் நல்ல தீர்ப்பு அளியுங்கள். இன்று மக்கள் சமுதாயத்தை மாற்றவல்ல தீர்ப்பு, மனிதனை மனிதனாக வாழவைக்கும் தீர்ப்பு, வீணர்களை வீழ்த்தும் தீர்ப்பு, விதியை விரட்டும் தீர்ப்பு அளியுங்கள். அதை அமுலுக்குக் கொண்டு வாருங்கள்! அதற்குத் தடையாகக் கடவுளே வரினும் கலங்காதீர்! சிவனே வரினும் சிதறாதீர்! மதமே வரினும் மயங்காதீர்! கலை கலை என்று இனக்கொலை செய்தால் கலைக்கொலை செய்யுங்கள்! அடிமை வாழ்வை அறுத்தெறியுங்கள்! மானமே பெரிதென மதியுங்கள்! சிந்தித்து நல்ல தீர்ப்புக் கூறுங்கள்! செயலில் காட்டுங்கள்! “

– 19-2-1945 இல் தாம்பரம் கிறித்துவக் கல்லூரி தமிழ்ப் பேரவை ஆண்டு விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியது.

#சீனா #சன்யாட்சென் #இளைஞர்கள் #பெரியோர் #புதுமை #கமால்பாஷா #youngster #oldagepeople #china #sanyatsan #kamalbasha #annaspeech #perarignaranna

You might also like