’நாயகன்’ திரைப்படம் தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த பட வரிசையில் முக்கியமானதொன்று. அதனைத் தந்த இயக்குனர் மணிரத்னம், நாயகன் கமல்ஹாசன் இருவரும் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து ஒரு படைப்பைத் தருகின்றனர் எனும்போது எத்தகைய எதிர்பார்ப்பு உருவாகும்? அதனைத் தாங்கி வந்திருக்கிறது ‘தக் லைஃப்’.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் எஸ்.டி.ஆர்., அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, ஜோஜு ஜார்ஜ், மகேஷ் மஞ்ச்ரேகர், அலி ஃபசல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
சரி, எதிர்பார்ப்பினை எந்தளவுக்குப் பூர்த்தி செய்திருக்கிறது ‘தக் லைஃப்’?
‘த.லை’ கதை!
‘இது ஒரு கேங்க்ஸ்டர் படம்’ என்பதை அறிமுக வீடியோவிலேயே தெளிவுபடுத்தியிருந்தார் மணி ரத்னம்.
நாயகன் படமும் ஒரு கேங்க்ஸ்டர் ட்ராமா தான் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பினை அது அதிகப்படுத்தியது.
ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) தில்லியில் ஒரு கேங்க்ஸ்டராக வலம் வருகிறார். அவரது சகோதரர் மாணிக்கம் (நாசர்).
ஒரு என்கவுண்டர் நடவடிக்கையின்போது கேங்க்ஸ்டர் சக்திவேலின் கும்பல் தவறுதலாக ஒரு நபரைச் சுடுகிறது. அவரது மகன் அமரன் (எஸ்.டி.ஆர்). சிறு வயதில் அனாதரவற்று இருந்த அமரனை வளர்த்து ஆளாக்குகிறார் சக்திவேல்.
சக்திவேல் தனது எதிரியாக கருதுபவர் சதானந்த் (மகேஷ் மஞ்ச்ரேகர்). அவரது உறவினரைக் கொன்ற வழக்கில் சிறையில் இருக்கிறார் சக்திவேல்.
ஒருநாள் சதானந்தை அமரனும் மாணிக்கமும் சந்திக்கின்றனர். அவர் அரசியலில் ஈடுபடவிருப்பதால், சக்திவேல் தரப்பின் உதவியை எதிர்பார்க்கிறார். இரு தரப்புக்கும் சுமூகமான உறவு ஏற்படப் பேச்சு நடக்கிறது.
இது சக்திவேலுக்குத் தெரிய வரும்போது, அவர் ஆத்திரப்படுகிறார். ஆனாலும், அமரன் சொல்வதைக் கேட்டு ’சரி’ என்கிறார். அதைத் தொடர்ந்து, சக்திவேல் சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
இந்த நிலையில், சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர்.
அதனை நடத்துவது சதானந்தின் உறவினரான தீபக் (அலி ஃபசல்). ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சக்திவேல் மனதில் அமரன் மீது சந்தேகம் முளைக்கிறது.
அது தெரிய வரும்போது அமரன் வருத்தமடைகிறார். மனதளவில் உடைந்து போகிறார். ஏற்கனவே தலைமையித்தைக் கைப்பற்ற முடியாத வருத்தத்தில் இருக்கும் மாணிக்கமும் இதர நபர்களும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
சக்திவேலுக்கும் அமரனுக்கும் இடையே பகையை உருவாக்குவதற்கு வழி அமைக்கின்றனர்.
அதன்பிறகு என்ன ஆனது? சக்திவேல் எடுத்து வளர்த்த அமரன், அவருக்கு எதிரான நிலையில் நின்றாரா? அதன்பின் என்ன ஆனது என்று சொல்கிறது ’தக் லைஃப்’ மீதி.
அபாரமான ஆக்கம்!
‘இது மணிரத்னம் படம்’ என்று சொல்லும் அளவுக்கு இதன் ஆக்கம் அபாரமாக அமைந்திருக்கிறது.
ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு, ஷர்மிஸ்தா ராயின் தயாரிப்பு வடிவமைப்பு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, அன்பறிவ் சகோதரர்களின் ஸ்டண்ட் எனப் பல நுட்பங்கள் அதற்குத் துணை நின்றிருக்கின்றன.
இது போக ஒலிப்பதிவு, டிஐ, விஎஃப்எக்ஸ், காஸ்ட்யூம், மேக்கப் எனப் பல நுட்பங்கள் இதில் சிறப்பாக இருக்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் தந்திருக்கும் பின்னணி இசை தொடக்கம் முதலே ஒரு பிரமாண்ட படத்தைப் பார்க்கிறோம் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது. ’என்ன வேணும் உனக்கு’, ’அஞ்சு வண்ணப் பூவே’ உட்பட அனைத்து பாடல்களும் பின்னணியிலேயே ஒலிக்கின்றன.
‘ஜிங்குச்சா’ மட்டுமே அதில் விதிவிலக்கு. ரொம்பவும் எதிர்பார்த்த ‘விண்வெளி நாயகா’ இறுதியில் ஒலித்து நம்மை ஏமாற்றியிருக்கிறது. ஆனால், தியேட்டரில் இந்த பாடல்களைக் கேட்பது வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்துவது உறுதி.
நடிப்பைப் பொறுத்தவரை கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர், த்ரிஷா ஆகியோர் முதன்மையான பங்கை வகிக்கின்றனர். சில ஷாட்களில் இவர்கள் தருகிற நுணுக்கமான பாவனைகள் ‘சபாஷ்’ என்று சொல்ல வைப்பவை.
இது போக ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, மகேஷ் மஞ்ச்ரேகர், அலி ஃபசல், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தணிகலபரணி, பாபுராஜ், பகவதி பெருமாள் ஆகியோரோடு வையாபுரி, சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரும் இதில் நடித்திருக்கின்றனர்.
இவர்களது நடிப்பில் குறை இல்லை என்றபோதும், ஒவ்வொரு பாத்திரத்தையும் தனியே நினைவில் கொள்ளும் அளவுக்கு அவற்றின் வார்ப்பு அமையாதது குறையே.
இயக்குனர் மணி ரத்னம் உடன் இணைந்து நாயகன் கமல்ஹாசன் இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.
கமல் பேசும் சில வசனங்கள் தியேட்டரில் சிரிப்பை வரவழைக்கின்றன. ’மேடம் ஐ யாம் யுவர் ஆடம்’ என்று த்ரிஷாவிடம் அவர் பேசுகிற வசனம் அதிலொன்று.
’தக் லைஃப்’ எனும் படத்தில் இப்படிப்பட்ட வசனங்களை எதிர்கொள்வது சிலருக்குச் சங்கடமாக இருக்கலாம்.
திரைக்கதையைப் பொறுத்தவரை, எதையெல்லாம் திரையில் சொல்லலாம், எதனைத் தவிர்க்கலாம் என்பதில் குழப்பத்தை எதிர்கொண்டிருக்கிறது ‘தக் லைஃப்’. காட்சிகள் மற்றும் பாத்திரங்களின் வார்ப்பில் பெரிதாகப் புதுமைகள் இல்லை.
ஒரு திரைப்படத்தை ஏன் ஆக்குகிறோம் என்பது படக்குழுவினருக்கான கேள்வியாக இருக்க வேண்டும். இந்த படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பது பார்வையாளர்களுக்கான கேள்வியாக இருக்க வேண்டும்.
இந்த இரு கேள்விகளுக்கு ‘தக் லைஃப்’ எந்த பதிலும் தரவில்லை.
போலவே, ‘இது க்ளாஸா, மாஸா’ என்ற கேள்விக்கும் பதிலளிக்கத் திணறியிருக்கிறது. அது திரைக்கதை ட்ரீட்மெண்டிலும் பிரதிபலிக்கிறது. இது பரீட்சார்த்த முயற்சியாகவும் இல்லை. சிறப்பானதொரு கமர்ஷியல் பட அனுபவத்தையும் வழங்கவில்லை.
என்னதான் சமையலறை புதிதாக இருந்தாலும், ஏகப்பட்ட பொருட்கள் வாங்கி அடுக்கப்பட்டிருந்தாலும், நவீன சமையல் சாதனங்கள் இருந்தாலும், இறுதியாக சமையல் நிறைவடைந்து கிடைக்கிற பதார்த்தம் ருசியாக இருப்பதுதான் முக்கியமானது. முந்தைய வேளையில், நாட்களில் கிடைத்த ருசியை நினைத்துக்கொண்டு இன்றைய உணவை ருசிக்க முடியாது.
‘தக் லைஃப்’ பார்த்து முடிக்கையில் இதுவே நம் நினைவில் நிற்கிறது. இதற்குப் பிறகும், ‘படம் நல்லாயிருக்கா’ என்று கேட்க கூடாது.
ஓரிரு நாட்கள் கழித்து, ‘இந்த பாத்திரத்தின் வழியே, காட்சியின் வழியே மணி ரத்னம் படிமமாக என்ன சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா’ என்று ஒரு கும்பல் ஜல்லியடிக்கும்.
அதனை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தால், படத்தையே மல்லுக்கட்டி ஒருமுறை பார்த்துவிடலாம் என்று தோன்றும்.
– உதயசங்கரன் பாடகலிங்கம்