பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16

 ******

எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே”

                 புறநானூறு 141 : 13-15

திணை – பாடாண்
துறை – பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம்.

வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடியது.

பாணன் சூடிய பசும்பொன் தாமரை

எனத் தொடங்கும் பாடலில் இடம் பெறும் வரிகள்.

பதவுரை: எத்துணை = எவ்வளவு, எத்தனை; ஈத்தல் = கொடுத்தல்; மறுமை = மறுபிறவி, மறுவுலகம் என்பர் பிறர். மறுபயன் என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.

நோக்கின்றோ = நோக்கியது; அன்றே = அல்ல; வண்மை = வள்ளல் தன்மை

கொடுப்பது நன்று என எவ்வளவு கொடுத்தாலும் அவ்வாறு அளிப்பது மறுமைப்பயன் நோக்கியன்று; அஃதாவது, பிறருக்குக் கொடுப்பதால் மறுபயன் கிடைக்கும் என்று கருதிக் கொடுப்பவனன்று பேகன்.

அவனது கொடைத் தன்மை பிறரது வறுமைத் துன்பத்தைப் போக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

தேவைப்படுவது சிறிதோ, பெரிதோ, எந்த அளவாயினும் ஈதல்தான் பெரிது எனக் கொடுப்பவன் என்று தேவையறிந்து கொடுப்பவன் என்கிறார்.

இதனைப் புலவர் தாமாகக் கூறாமல் பரிசில் பெற்ற பாணன், பரிசில் பெற வந்த பாணனிடம் கூறுவதுபோல் கூறுகிறார்.

பேஎன்னும் சொல்லின் ஒரு பொருள் மழை முகில். மழை முகில் போன்றவன் என்ற பொருளில் பேகன் என்று பெயர் வந்ததாகப் பொருள்.

கொடை மடத்தால் மயிலுக்குப் போர்வை அணிவித்த மன்னன்தான் பேகன். கடையெழு வள்ளல்களில் ஒருவனாகப் போற்றப்படுபவன்.

ஒருவருக்குக் கொடுப்பது, உதவும் வள்ளல் என்றோ கொடைத்தன்மையில் சிறந்தவர் என்றோ பிறர் பாராட்டுவதற்கோ புகழ்ந்து பேசுவதற்கோ அல்ல. ஒருவரின் துன்பத்தைப் போக்க வேண்டும் எனக் கருதியே கொடுப்பது ஆகும்.

பிறர் துன்பம் போக்கும் வள்ளல் தன்மை மிக்கவனே பேகன். இவ்வாறு பரணர் வையாவிக் கோப்பெரும் பேகனைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

பிறருக்குக் கொடுப்பதன் மூலம் பயன் எதிர்நோக்காமல் செயற்படுவதே சிறப்பாகும்.

“இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்,
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”
                      புறநானூறு 134 : 1-2

என்று புலவர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய்அண்டிரனைப் பற்றிக் கூறும் பொழுது இம்மையில் செய்யும் நற்செயல் மறுமைக்குப் பயன் தரும் என்று கருதும் அறத்தை விலைபேசும் வணிகன் அல்லன் என்று பாராட்டியிருப்பார்.

கொடை என்பது இருப்பவர்க்கும் தேவை இல்லாதவர்க்கும் கொடுப்பது அல்ல. இல்லாதவருக்கும் தேவை இருப்பவர்களுக்கும் தேவையறிந்து கொடுப்பதுதான் உண்மையான கொடை.

அதனால்தான் திருவள்ளுவரும்,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.   (திருக்குறள், ௨௱௨௰௧ – 221)

என்கிறார். அஃதாவது ஒன்றும் இல்லா வறுமையாளருக்குக் கொடுப்பதுதான் ஈகை. பிற வெல்லாம்  மறுபயனை எதிர்நோக்கிக் கொடுப்பதே ஆகும்.

இவ்வாறுதான் மன்னன் பேகனும். வறியவர்களிடமிருந்து எதிர்ப்பயன் ஒன்றும் இவருக்குத் தேவையில்லை.

ஆனால், இலலாதவர்க்குக் கொடுப்பதன் மூலம் மறுமையில் பயன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறதே அம்மறுபயனை எதிர்நோக்கிக் கொடுக்கலாம் அல்லவா? அவ்வாறு மறுபயன் நோக்கி அவன் கொடுககவில்லை. எனவேதான் பரணர் போற்றுகிறார்.

பெரு மழை, பெரு வெள்ளம், கடும்புயல், நில நடுக்கம், கடல்கோள் முதலிய இயற்கை இடர்களின் பொழுதும் பெருநேர்ச்சி(விபத்து)களின் பொழுதும் யார், எவர் என அறியாமல் பயன் நோக்காது மக்கள் பாதிப்புற்றவர்களுக்குத் தாமாக முன்வந்து உதவுகிறார்கள் அல்லவா? இவ்வுதவிதான் பயன் கருதா உதவியாகும். இதுபோல்

நாமும் சங்கப் புலவர்கள் பொன்னுரையை ஏற்றுப் பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

You might also like