திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபுத்தன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக ஊடகத் துறையில் அனுபவம் பெற்றவர். பத்துக்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார்.
நாவல் வரிசையில் இவரின் முதல் நூல் பெரியவன். வாசிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது. நூலைப் படிக்க படிக்க நமக்குள் கிளைக் கதை ஒன்று வளரத் தொடங்குகிறது. ஆமாம், நமது வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கத் தூண்டுகிறது.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு கதை இருக்கும். அது இந்த சமூகத்துக்கு எத்தனை பயனுள்ளதாக இருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறது பெரியவன் நாவல்.
சிறு கிராமத்தில் விவசாயியாக இருக்கக்கூடிய ஒருவர், தன் வாழ்நாள் முழுவதும் எப்படி பத்திரிகையாளராகவும் இயங்கிவந்தார் என்பதை நிதானமாக நம்மோடு பேசுகிறது நாவல்.
ஒளிச்செங்கோ என்ற புனைபெயருடைய நடராசன்தான் கதையின் நாயகர். திராவிடப் பற்றுடன் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி தன் வாழ்நாள் முழுவதும் எளிமையாகவும் உறுதியாகவும் அயராத உழைப்பாளியாகவும் வாழ்ந்த ஒரு பெரிய மனிதரின் கதை.
எல்லோரையும்போல அவருக்கும் குடும்பம் குழந்தைகள் பண கஷ்டம், வேதனைகள் உண்டு. ஆனால், அவற்றைக் கடந்து குடும்பத்தை மேம்படக் கொண்டுவருவது சாமானிய மனிதர்களின் வாழ்க்கை.
குடும்பத்துடன் சேர்த்து சமூகத்தையும் மேம்படுத்த தனது ஈடுபாட்டின் வழியாக நடராசன் என்ன செய்தார் என்பதுதான் ‘பெரியவன்’ நாவல் நமக்குக் கூறுகிறது.
அந்த ஊரில் விவசாய வேலைகளின் ஊடே இவருக்கு எப்படி பல நாட்டுப் புரட்சிகளின் புத்தகங்களை வாசிக்க ஆர்வம் வந்திருக்கும் என்பது எனக்குள் எழுந்த கேள்வி.
இந்தக் காலத்தில் இணையம் இருக்கு. எல்லாமே எளிதாய் கிடைக்கும். ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன்பு சைக்கிளில் தேடியே சாதித்திருக்கிறார்.
நிறைவான வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாசிப்பு, மனிதர்களுடனான உறவு, நேர்மை என உயர்ந்துநிற்கிறார் பெரியவன். நாவலை வெளியிட்ட மறுநாளே அதன் நாயகராகிய நடராசன், இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் என்பது பெருந்துயரம்.
ஆனால், அவரது பூதவுடல் அழிந்தாலும் புகழுடலால் நிலைத்து நிற்பார் என்ற கூற்றுக்கிணங்க, இந்த நாவல் அவரது வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது.
நாவலின் மொழிநடை ஆர்ப்பாட்டம் இல்லாத நீரோட்டம்போல அமைதியாக ஒவ்வொரு காட்சியையும் நம் கண்முன்னே கொண்டுவருகிறது.
ஒவ்வொரு பக்கத்திலும் வாசிப்பவருக்கு நெருக்கமான உணர்வுகளைத் தரும் வரிகளைப் படைத்திருக்கிறார் ஆசிரியர். அது வேறொன்றுமில்லை.
நாவலின் போக்கில், அதை வாசிப்பவர் தன் வாழ்க்கையை, கதாபாத்திரங்களை, நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் உணர்வுதான்.
இன்னும் பல நாவல்களைப் படைப்பதற்கு சுந்தரபுத்தனுக்கு ‘பெரியவன்’ நாவல் ஓர் ஆரம்பமாக இருக்கும் என வாழ்த்துகிறேன்.
****
பெரியவன்! (நாவல்)
ஆசிரியர்: சுந்தரபுந்தன்
தமிழ்வெளி வெளியீடு!
பக்கங்கள்: 208
விலை ரூ. 285/-
தொடர்புக்கு: 9094005600