பறையர் – ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்படுமா?

தமிழ்நாடு அரசுக்கு ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

பறையர் – ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா? என விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்றம் உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “2011 சென்சஸ் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்கள் தொகை : 21 லட்சத்து 50 ஆயிரத்து 285. தேவேந்திரகுல வேளாளர் மக்கள் தொகை : 24 லட்சத்து 65 ஆயிரத்து 96.

பறையர் – ஆதிதிராவிடர் மக்கள் தொகை: 91 லட்சத்து 73 ஆயிரத்து 139. கிறித்தவர்களில் உள்ள பறையர் – ஆதிதிராவிடரை இத்துடன் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும்.

சற்றேறக்குறைய பறையர் – ஆதிதிராவிடர் அளவு மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமூகத்தினர் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் பெற்றுள்ள இடத்தோடு ஒப்பிடும்போது பறையர் – ஆதிதிராவிடர் பெற்றுள்ள இடம் மிக மிகக் குறைவு என்பதை எவரும் ஒப்புக்கொள்வார்கள்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசு ஆர்டிஐ விண்ணப்பம் ஒன்றுக்கு வழங்கியுள்ள தகவலில் வேலை வாய்ப்பிலும், மருத்துவப் படிப்பிலும் வன்னியர் சமூகத்தினர் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கையைக் கொடுத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள துரை.ரவிக்குமார்,

வன்னியர்கள் கேட்கும் 10.5% இட ஒதுக்கீட்டைவிடக் கூடுதலாக அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுகிறார்கள் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது எனவும் அவ்வாறிருந்தும் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு மறுக்கவில்லை எனவும்

வன்னியர் சமூகத்தினருக்குத் தமிழ்நாடு அரசு உள் ஒதுக்கீடு கொடுத்ததற்குப் பிறகு வன்னியர்களைவிடப் பொருளாதாரத்திலும், சமூக நிலையிலும், அரசியல் அதிகாரத்திலும் மிகவும் பின் தங்கியிருக்கிற பறையர் – ஆதிதிராவிடரும் ஏன் அதுபோல உள் ஒதுக்கீடு கேட்கக்கூடாது? என்ற கேள்வி பறையர் – ஆதிதிராவிடர் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.

தனிப்பட்ட உரையாடல்களில் அதை அவர்கள் வெளிப்படுத்தினாலும் தமிழ்நாடு அரசை நோக்கி அதை ஒரு கோரிக்கையாக இன்னும் முன்வைக்கவில்லை. அப்படி முன்வைத்தால், வன்னியர் உள் ஒதுக்கீடுக்காக முதலில் சட்டம் இயற்றிய அதிமுக அதை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்,

10.5% சட்டத்தை ஆதரிக்கும் தற்போதைய திமுக அரசு அதுபோல பறையர் – ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா? என்றும் தமிழ்நாடு அரசு அவ்வாறு சட்டம் இயற்றினால் இப்போது 10.5% சட்டத்தை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும் மற்ற அரசியல் கட்சிகளும் அதை ஆதரிப்பார்களா? என்றும் விசிக எம்.பி துரை.ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

You might also like