இயற்கைப் பேரிடரும் மனித சக்தியும்!

கேரளத்தைப் பொறுத்தவரை கல் குவாரி உரிமையாளர்கள் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். (சில அரசியல்வாதிகளுக்கு ‘பினாமி’ முறையில் சொந்தமான கல் குவாரிகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இயற்கைப் பேரிடர்களுக்கு ஆளாகும் மலைப்பகுதிகளில், அதுவும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில், கல் குவாரிகளை அமைக்கக் கூடாது, நெல் பயிரிடப்படும் வயல்களை ‘ரியல் எஸ்டேட்’ வணிகத்துக்காகக் கூறுபோடக் கூடாது என்கிற நியதிகள் தளர்த்தப்பட்டு, அவற்றுக்கு விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் இடங்களில் வீடுகளையும் பங்களாக்களையும் கட்டுவதற்கு அனுமதி தரப்படுவதுடன், அங்கு புதிய தார் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவையும் கூட அடிக்கடி நிகழும் நிலச்சரிவுகளுக்குக் காரணம்.

சில ஆண்டுகளாகக் கேரளத்தில் முன்னெப்பவும் இல்லாத அளவுக்கு மழைப் பொழிவு ஏற்படுவதற்குக் காலநிலை மாற்றம்தான் காரணம் என்றால், அதற்குச் சுயநலம் மிக்க உலக முதலாளி வர்க்கம்தான் முதன்மைக் காரணம். எனவே, காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சினையாகிவிட்டது.

இது முடிவா?

கேரளத்தில் பொழிந்த மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளங்களின் காரணமாக, 2019 ஆகஸ்ட் 8ஆம் தேதி காவலப்பற, மலப்புரம் பகுதியில் சிக்கி 59 பேரும் வயநாடு மாவட்டத்தில் உள்ள புதமலையில் 17 பேரும் இறந்தனர்.

2010 ஆகஸ்ட் 6ஆம் தேதி இடுக்கி மாவட்டத்தில் 70 பேர் உயிரிழந்தனர், 2021 அக்டோபர் 16இல் கோட்டயம் மாவட்டத்தில் 13 பேரும், இடுக்கி மாவட்டத்தில் 7 பேரும் நிலச்சரிவுக்குப் பலியாகினர். ஏராளமான வீடுகளும் வாகனங்களும் சிதைந்துபோயின.

இவற்றிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்லை; சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய எவ்வித அக்கறையும் காட்டப்படவில்லை.

இந்த அலட்சிய மனப்பான்மையும்கூடக் கடந்த ஜூலை 30, 31இல் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நெஞ்சைப் பிளக்கும் பேரழிவுக்குக் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று கிராமங்களும் அதிலிருந்த மனிதர்களும் மண்ணில் புதைந்தனர்.

மண்ணில் புதைந்தவர்கள், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மாண்டவர்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் போக, மேலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கக்கூடும். இறந்தவர்களில் கணிசமானோர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நல்ல வசிப்பிடப் பகுதிகள் அவர்களுக்கு இல்லாததால், தாழ்வான பகுதிகளில் குடிசைகள் போட்டு அவர்கள் வாழ்ந்துவந்தனர்.

நெஞ்சைப் பிளக்கும் இந்த மானுட அவலத்துக்குப் பிறகேனும் எங்கெல்ஸும் சார்த்தரும் விடுத்த எச்சரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படுமா? இது ஒருபுறமிருக்க.. நீலகிரி மாவட்டமும் பெருமளவு மாறிப்போயிருக்கிறது.

மரங்களே இல்லாத, வெறும் கான்கிரீட் கட்டிடங்கள் மட்டுமே உள்ள உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளதால், மலைகளின் தாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் நிகழும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் அவற்றுக்கான காரணிகள் பற்றியும் ஒரு புத்தகமே எழுதலாம். வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நீலகிரி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஓர் அபாய அறிவிப்பாகும்.

– மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை

நன்றி : இந்து தமிழ் திசை நாளிதழ்.

You might also like