நெகிழிக்கு எதிராக மாணவரின் நூதனப் போராட்டம்!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுப்பையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சக்திகாந்த். சமூக ஆர்வலர். இவரது மகன் ஜெய்குரு (வயது 14). அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

இந்நிலையில் ஜெய்குரு பட்டுக்கோட்டை பெரிய தெருவில் உள்ள முருகையா ஓட்டலுக்கு சாப்பாடு வாங்குவதற்காக பாத்திரங்கள் எடுத்துச் சென்று ஒரு சாப்பாடு டோக்கன் வாங்கிக் கொண்டு பார்சல் கட்டுமிடத்திற்கு சென்று சாப்பாடு கேட்டுள்ளார்

ஓட்டல் ஊழியர் பாத்திரத்தில் சாப்பாடு தரமாட்டோம். பிளாஸ்டிக் பைகளில் தான் தருவோம் என்று கூறினார்.

அதற்கு சிறுவன் ஜெய்குரு பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் சென்று சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று கூறியுள்ளார். உடனே ஓட்டல் கேஷியர் சிறுவனிடமிருந்து டோக்கனை திரும்பி வாங்கிக் கொண்டு சாப்பாடு தரமறுத்து சிறுவனை திருப்பி அனுப்பிவிட்டார்.

இதையடுத்து சிறுவன் ஜெய்குரு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தரணிகாவிடம் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர் .

14 வயதுள்ள ஒரு பள்ளி மாணவன் கொடுத்த புகாரினைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகரம் மற்றும் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு பெரிய தெருவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி, டீக்கடை, பழக்கடைகளுக்குச் சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அப்போது பார்சல் உணவை பாத்திரத்தில் தர மறுத்த ஓட்டலுக்குச் சென்ற உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஓட்டல் கேஷியரிடம், “பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டியது தானே.

பார்சலுக்கு என்ன அளவு கொடுப்பீர்களோ அந்த அளவுதானே பாத்திரத்தில் கொடுக்கப் போகிறீர்கள். பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் நீங்கள் கொடுக்கவேண்டும்” என்று ஓட்டல் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அதே தெருவில் உள்ள மற்ற ஓட்டல்களில் உள்ள சமையல் அறைக்கு சென்று ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் சமையல் அறையில் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் கேப் அணிந்தும், கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொள்ள வேண்டும்.

தயார் செய்து வைத்துள்ள உணவுகளை எப்போதும் இலையைப் போட்டு மூடி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பழக்கடைகள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், பூஞ்சானம் பிடித்த 5 கிலோ கேக்குளை அழித்தனர். அதேபோல் 3 கிலோ அழுகிய பழங்களையும் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டு அழித்தனர்.

இந்த அதிரடி ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓட்டல் மற்றும் ஒரு பேக்கரி, ஒரு பழக்கடை, ஒரு டீக்கடை ஆகிய 4 கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 6,000 அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை நோட்டீசும் வழங்கினர். 

#Pattukkottai #Food_Department_Safety #பட்டுக்கோட்டை_ஓட்டல் #உணவு_பாதுகாப்பு_துறை #பார்சல்_உணவு

You might also like