18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால்…!

ரூ.25 ஆயிரம் அபராதம்.

இந்தியா முழுவதும் அதிகளவு விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடுமையான கட்டுப்பாடுகளை போக்குவரத்துத் துறை விதித்து வருகிறது.

இதேபோல், தமிழ்நாட்டிலும் விபத்துகளைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 18 வயது நிரம்பாதவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பது விதி. ஆனால் 18 வயது நிறைவு பெறாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது.

இதனால் பல விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பலமுறை காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை கண்டித்தும் இது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறை ஒரு விதியை அமல்படுத்துகிறது.

அதன்படி 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. அதோடு, பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், அவரின் பெற்றோருக்கு 3 மாத சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்த விதி வரும் ஜூன் 1-ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

You might also like