பாடுவதை மறந்து அழுத எஸ்.ஜானகி: வரிகளில் ஜாலம் செய்த வாலி!

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி பாணியை வைத்திருந்தவர் வாலிபக் கவிஞர் வாலி. அனைத்து வயதினருக்கும் ஏற்ற, அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற பாடல்களை இயற்றுவதில் வல்லவர் வாலி.

காதல், தத்துவம், ஏக்கம், சோகம், காமம், குத்து பாட்டு என எந்த சூழ்நிலைக்கும் பாடல்களை இயற்றி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வாலி.

தன் வரிகளால் ரசிகர்களை மயக்கும் வாலி, பாடகி ஜானகியை பாட முடியாமல் அழச் செய்த சம்பவமும் நடந்துள்ளது.

1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அச்சாணி. காரைக்குடி நாராயணின் கதையில் உருவாகிய இந்த படத்தில் முத்துராமன், லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தனர். பாடல்களை வாலி எழுதியிருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் தான் ‘மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்’. இந்த பாடலை ஜானகி பாடியிருந்தார்.

அருமையான டியூன், சிறப்பான பாடல் வரிகள் அமைந்ததால் இளையராஜா தன் பங்கிற்கு இசைமூலம் இப்பாடலுக்கு உயிர் ஊட்டியிருந்தார்.

இயேசுவை பெறாமல் பெற்ற தாயாக மேரி மாதா இருந்தது போல இந்தப் படத்தின் கதாநாயகிக்கு காட்சிகள் அமைக்கப்பட்டு, அந்த சூழலில் இந்தப் பாடல் இடம் பெறும்.

முன்னதாக இந்த பாடல் உருவான போது பல தடங்கல்கள் ஏற்பட்டது.

பிரசாத் ஸ்டுடியோ பிஸியாக இருந்ததால் இளையராஜாவால் காலையில் இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்யமுடியவில்லை.

எனவே, வேறு ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றனர். ஆனால், அங்கு சில கருவிகள் வேலை செய்யவில்லை.

எனவே, மதியம் மீண்டும் பிரசாத் ஸ்டுடியோ வந்து பாடலை ஒலிப்பதிவு செய்தனர்.

அப்படி ஒலிப்பதிவு செய்தபோது, ஸ்டூடியோவில் மியூசிக் கண்டக்டர் என ஒருவர் இருப்பார். அவர் கை அசைவுக்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் இசையை வாசிக்க துவங்குவார்கள்.

ஆனால், இந்தப் பாடல் இசையில் மயங்கி அவர் கை காட்டவே இல்லை. இசைக்கலைஞர்கள் வாசிக்காததால் இளையராஜா என்ன ஆச்சு என கேட்டபோது ‘டியூனில் என்னை மறந்துவிட்டேன்’ என சொன்னாராம்.

அதன்பின் எல்லாம் சரியாக நடந்துக் கொண்டிருந்தபோது, பாடலை பாடிக்கொண்டிருந்த ஜானகி ‘பிள்ளை பெறாத பெண்மை தாயானது.. அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது’ என்கிற வரிகளை பாடாமல் நிறுத்திவிட்டாராம்.

எல்லோரும் ஜானகியை பார்த்தபோது அவர் தொடர்ந்து பாட முடியாமல் அழுது கொண்டிருந்தாராம்.

ஜானகியிடம் என்ன ஆச்சு என இளையராஜா கேட்க ‘இந்த இசையும், வரிகளும் என்னை ஏதோ செய்கிறது’ என சொல்லியிருக்கிறார்.

பின்னர் ஜானகியை ஆசுவாசப்படுத்தி சிறிது நேரம் கழித்தே அந்த பாடலை ஒலிப்பதிவு செய்து முடித்துள்ளனர்.

இதனிடையே இந்தப் பாடலை கேட்டுவிட்டு இதே மாதிரி பாடல் எனக்கு வேண்டும் என இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இளையராஜாவிடம் கேட்டு அடம்பிடித்துள்ளார்.

அப்படி உருவான பாடல்தான் பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற ‘மணி ஓசை கேட்டு எழுந்து’ என்கிற பாடல். இந்த பாடலையும் ஜானகியே பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-நன்றி : முகநூல் பதிவு

You might also like