நாமும் வி.பி.சிங் குடும்பத்தினர் என்பதில் பெருமையே!

– முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார்.

மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார்.

1969ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.
வி.பி.சிங் பணியை கண்டு வியந்த இந்திரா காந்தி உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக 1980-ம் ஆண்டு நியமித்தார்.

அந்த காலகட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த முடியாததற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு, பதவி விலகவும் முன்வந்தார்.

1984 முதல் 1987 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த வி.பி.சிங், 1987-ல் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரானார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய வி.பி.சிங் ஜன் மோர்ச்சா எனும் கட்சியை 1987இல் நிறுவினார்.

1988-ல் ஜன் மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தள், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கினார் வி.பி.சிங்.

மாநிலக் கட்சிகளான தி.மு.க, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கன பரிஷத் ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது.

1989 தேசிய முன்னணியைக் கட்டமைத்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 7வது பிரதமராக பொறுப்பேற்றார்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர் வி.பி.சிங்.

காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் 1990-ல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் அமைக்கப்பட்டது.

பாபா சாகேப் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும்.

1990-ல் பாஜக ஆதரவை விலகிக்கொண்டதால், வி.பி.சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

அதன் பிறகு, பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தவர், 2006-ம் ஆண்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நில கையகப்படுத்தியதற்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்து வழி நடத்தினார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின்போது, சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவச் சிலை கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலையை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

மேலும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜய சிங், அபய் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர், டெல்லி சந்திப்பில் விபி சிங் பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது என்றார். தமிழ்நாடு வி.பி.சிங்கிற்கு தந்தை வீடு என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், நாங்களும் விபி சிங் குடும்பத்தினர் என்பதில் பெருமை கொள்கிறோம் என்றார்.

You might also like