பத்மா-80 விழா!

நாட்டியத்திற்கு என்றே தன்னை ஒப்படைத்துவிட்ட அபூர்வமான கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்.

வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை சென்னை நாரத கான சபா அரங்கில் அவரைப் பெருமைப்படுத்தும் விழா நடக்க இருக்கிறது.

அவருக்குச் சிறப்பான வாழ்த்துகள்!

இசையில் இளங்கலைப் படிப்பு. மரபிசையியலில் முதுகலைப் படிப்பு. நாட்டியத்தில் முனைவர் பட்டம். பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட 125 க்கும் அதிகமான விருதுகள்.

75 ஆண்டுகளாக நடத்திவரும் நிருத்யோதயா பள்ளி  – என்று நீண்ட பின்னணி கொண்ட பத்மா சுப்பிரமணியத்தின் வாழ்வை மிகச் சுருக்கமாகச் சொல்லும் ‘நதிமூலம்’ கட்டுரை பிரபல வார இதழில் வெளிவந்து,பின்னர் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
அந்தப் பதிவு மீண்டும் உங்களுக்காக:


*
சென்னை மயிலாப்பூரில் இருந்த அந்த விசாலமான பங்களா பல கலைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம். கும்பகோணத்தில் பிறந்து வழக்கறிஞரான பிறகும் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து மௌனப் படங்களைத் தொடர்ந்து, பல சர்ச்சைக்குரிய படங்களைத் தயாரித்தவர் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.

சுப்பிரமணியத்தின் மூத்த மனைவியான மீனாட்சிக்கு 9 குழந்தைகள். இளைய தாரமான எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு ஒரு மகன். மீனாட்சிக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில் 4 பேர் பெண்கள்.

அதில் கடைக்குட்டிப் பெண் பத்மா.

பத்மா பிறக்கும் முன்பே அவர்களது வீட்டில் பரதம் புகுந்து விட்டது. வீட்டில் ஒரு போர்ஷன்லேயே ‘நிருத்யோதயா’ என்கிற நாட்டியப்பள்ளி.

பரதம், கதகளி, மணிப்புரி கதக் என்று பல நாட்டியக் கலைஞர்களை வரவழைத்து சன்மானம் கொடுத்து வசதியில்லாத மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்தார் சுப்பிரமணியம்.

சுற்றிலும் பாட்டும் இசையுமான சூழ்நிலையில் பிறந்த பத்மாவுக்கும் அந்த துறுதுறுப்பு தொற்றிவிட்டது.

வட்ட முகமும் பெரிய விழிகளுமாக சூட்டிகையாக இருந்த பத்மாவை 4 வயதிலேயே தனது ‘கீத காந்தி’ படத்தில் குழந்தையாக நடிக்கவும் பாடவும் வைத்திருக்கிறார் அப்பா சுப்பிரமணியம்.

“எங்க அம்மா மீனாட்சியும் இசைக் கலைஞர். நல்லாப் பாடுவாங்க. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் நிறையப் பாடல்கள் இயற்றி இசையமைத்து இருக்காங்க. தமிழ் சினிமாவில் இசையமைத்த முதல் பெண்மணியும் இவங்க தான். அப்பவே எங்க அப்பா எடுத்த படங்களில் இசை அமைச்சிருக்காங்க.

எங்க அப்பா சுப்பிரமணியம் மெலட்டூரில் பாகவதமேளா நாட்டியத்தை படித்தவர். ஆனால் அவரால் அதில் தொடர்ந்து ஈடுபட முடியலை.

எங்களுடைய அக்கா லலிதா தான் எங்க வீட்டில் முதலில் பரதம் கத்துகிட்டா. நன்னா ஆடுவா. ஆனா அப்போ இருந்த சமூகக் கோட்பாடுகளாலே அம்மா, அவ ஆடுவதை அனுமதிக்கலை.

பத்மா நாட்டியம் கத்துக்க ஆரம்பிச்சப்போ சூழ்நிலை மாறிடுத்து. பரத நாட்டியத்திற்கு சமூகத்தில் இருந்த தவறுதலான பிரமை மாறிடுச்சு.

சின்ன வயசில் இருந்து பத்மாவுக்கு ‘ஒன் ட்ராக் மைண்ட்’. ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனம் செலுத்தி முடிப்பா.

பத்மா கிட்டே ஏதோ ஸ்பார்க் இருக்கிறதைப் பார்த்துட்டு அப்பா பரதம் கத்துக் கொடுக்க வைச்சார். பத்மாவுக்கு கற்பூர புத்தி, உடனே பிடிச்சுக்கிட்டா.

நாட்டியத்தில் விருப்பம் இருந்தாலும் இவளோட கல்வி பாதிக்கவில்லை. ஸ்கூல் போயிட்டு வந்ததும் பரதம் கற்கப் போயிடுவா.

கடைசிவரை கல்வி, நாட்டியம் இரண்டிலும் முதலிடம் தான்” பரிவுடன் சொல்கிறார் பத்மாவின் மூத்த சகோதரரான பாலகிருஷ்ணன். அப்போது பத்மாவுக்கு பிடித்தமான நாட்டியக் கலைஞர் கமலா. கூடவே வைஜெயந்திமாலா, பத்மினியின் நடன அசைவுகளும் பிடிக்கும்.

செயின்ட் தாமஸ் கான்வென்டில் படித்தபடி இவர்களது நடன நிகழ்ச்சிகளுக்கு போய்ப் பார்த்தபோது அதிலிருந்த ஏதோ ஒரு வேகம் தொற்றிவிட்டது பத்மாவுக்கு.

வீட்டுக்கு வந்து ஆட முயன்றபோது வீட்டிலிருந்த ‘நிருத்யோதயா’ மாணவியான கௌசல்யா சில நாட்டிய அசைவுகளைக் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

துரிதமாகக் கற்றுக் கொள்வதில் ஒரு ஈடுபாடு இருந்ததால் மயிலாப்பூரில் இருந்த வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்றுக்கொள்ள பத்மாவை அனுப்பினார்கள். அப்போது அவருக்கு ஆறு வயது.

பரதத்தில் அப்போது பிரபலமான கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி எல்லோருமே வழுவூர் ராமையா பிள்ளையிடம் நாட்டியம் கற்றுக் கொண்டவர்கள்.
பத்மா பரதம் கற்றுக் கொண்டபோது கூடவே இருந்து உதவி பண்ணியவர் நடிகையான ஈ.வி.சரோஜா.

(மதுரை வீரனின் எம்.ஜி.ஆரை கிண்டல் செய்து ’வாங்க மச்சான் வாங்க…’ பாடி அகன்ற விழிகளுடன் டான்ஸ் ஆடுவாரே அவர்தான்) துருதுருவென்று கற்றுக்கொள்ளத் தொடங்கி 11 வயதுக்குள்ளேயே நாட்டிய அரங்கேற்றம்.

எப்போதும் அரங்கேற்றத்தின் போது புதிதாக ஒரு சலங்கையை கட்டிக் கொள்ளாமல் பிரபலமானவர்களின் சலங்கைகளை ராசியாக கட்டிக்கொண்டு அரங்கேறுவது அப்போதைய வழக்கம்.

அதன்படி அரங்கேற்றத்தில் பத்மா அணிந்து ஆடினது நடிகை பத்மினியின் கால் சலங்கைகளை. (“எவ்வளவு ராசி பாருங்க“ -பத்மா) அதை அணிவித்தவர் பத்மினியின் தாயார் சரஸ்வதி அம்மாள்.

“பொதுவாக வழுவூர் பாணி நாட்டியத்தில் அழகுணர்ச்சி மிகுந்திருக்கும். லய சுத்தம் அங்க சுத்தத்தில் அதிக கவனம் காட்டுவோம்.

அப்பாவுடைய தூண்டுதலினால் இங்கே வந்து எங்க அப்பா வழுவூர் ராமையா பிள்ளையிடம் நாட்டியம் கற்றுக் கொண்டாலும் அதையும் சுலபமாகக் கற்றுக் கொள்கிற புத்தி பத்மாவுக்கு.

பல நடன அசைவுகளை மிக அழகாக வெளிப்படுத்தக்கூடியவர். அவர் பெரிய ஜீனியஸ்.” என்கிறார் பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் புதல்வரான வழுவூர் சாம்ராஜ்.

மெட்ரிகுலேஷன் விரைந்து முடித்துவிட்டாலும் கல்லூரிக்கு போக வயது தடையாக இருந்தது, இரண்டு வருஷ இடைவெளி.

அப்போது பல நகரங்களுக்கு சென்று நாட்டிய நிகழ்ச்சிகள், தன் வீட்டிலேயே நிருத்யோதயா மாணவிகளுக்கு பயிற்சி என்று தொய்வில்லாத வேகம் இருந்தது பத்மாவிடம்.

எத்திராஜ் கல்லூரியில் பி.யூ.சி முடித்ததும் சர்ஜனாக ஆகி விட வேண்டும் என்கிற ஆசை பத்மாவுக்கு. அப்பாவுக்கு அதில் இஷ்டமில்லை.

அதையும் மீறி அப்போது கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் பழக்கமானவர் என்பதால் போய் பார்த்தபோது சி.எஸ் சொன்ன பதில் “சர்ஜன்கள் பலபேர் கிடைக்கலாம்மா, ஆனா உன்னை மாதிரி டான்ஸர் கிடைக்க மாட்டா அதனாலே வேணாம்”.

பிறகு பி.ஏ., எம்.ஏ., ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பாப்புலர் டான்சர் என்று பெயர் வந்துவிட்டது.

கல்லூரிக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்து நாட்டிய உடைக்கு மாறி மேடையில் நாட்டியமாடப் போனாலும் படிப்பில் இருந்த கவனம் விலகிவிடவில்லை. நடனத்தின் மீது இருந்த மதிப்பு கூடிக்கொண்டே போனது.

கோவில்களுக்கு போகிறபோது அங்கிருந்த நாட்டிய சிற்பங்கள் ரொம்பவும் யோசிக்க வைத்தன.

நாட்டிய மரபு இருந்தால் தான் இப்படி சிற்பமாக பதிவாகியிருக்க முடியும்? நமது நாட்டிய மரபு தான் என்ன? இதை யார் ஆராய்வது? நாமே செய்தால் என்ன? இப்படிப் பல கேள்விகள்.

கோவில்களில் பதிவான நாட்டிய அசைவுகளை அப்படியே தனது மீனாட்சி கல்யாணம் நாட்டிய நாடகத்தில் புகுத்தி பார்த்தார். சலசலப்பு ஏற்பட்டது நாட்டிய அறிஞர்கள் மத்தியில்.

“சாத்திரத்திற்கும் செய்முறைக்கும் பாலம் அமைத்து இருக்கிறார்” என்று ம.பொ.சிவஞானம் போன்றவர்கள் புகழ்ந்தாலும், அந்த புது மரபு சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இருந்தும் பத்மா விடாமல் அதே பாணியிலேயேத் தொடர்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி ஆய்வு மாணவியாக சேர்ந்தபோது நடனம் சார்ந்து சிற்பங்கள் உள்ள 108 காரணங்களை ஆய்வுத் தலைப்பாக எடுத்துக் கொண்டார்.

தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம் மற்றும் ‘இந்திய அளவில் உள்ள கோவில்களுக்கு அலைந்து நுணுக்கமாக ஆய்வு செய்து இந்திய அளவில் ஒரு நாட்டிய மரபு நூலிழையாக ஒருங்கிணைத்திருக்கிறது’ என்பதை ஆய்வில் வெளிப்படுத்தியதும் அப்போதும் ஒரு சர்ச்சை.

“தனித்தனியாக வெவ்வேறு பாணியில் ஆடிக் கொண்டிருந்த நான், பத்மா, சித்ரா விஸ்வேஸ்வரன் மூன்று பேரும் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடத்த முடியுமா என்று தொலைக்காட்சியிலிருந்து கேட்டபோது, ஒப்புக்கொண்டு ‘விராலிமலைக் குறவஞ்சி’ என்று பத்மாவின் அண்ணி சியாமளா பாலகிருஷ்ணன் தயாரித்து வைத்திருந்த ஸ்கிரிப்ட்டை அடிப்படையாக வைத்து நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து நிகழ்ச்சியை தயாரித்து கொடுத்தபோது நல்ல வரவேற்பு.

பிறகு அதே நிகழ்ச்சியை ரஷ்யாவிலும் நடத்தினோம் அங்கும் பெரும் வரவேற்பு.
அதன் பிறகு நடந்த எனது பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது அதே நிகழ்ச்சியை, மறுபடியும் மூவரும் இணைந்து நடத்தினோம்.

வளர்ந்த கலைஞர்களுக்குள் இந்த விதமான ஒற்றுமை நிலவக் காரணம் பரஸ்பர புாிதல்தான்.

“பத்மாவைப் பொறுத்தவரை மிக நன்றாக பழகக்கூடியவர். சிறந்த கலைஞர். பல ஜென்மங்களுக்கு ஒருமுறைதான் பத்மா மாதிரியான கலைஞர்கள் பிறக்கிறார்கள்” என நெகிழ்ந்து சொன்னார் பிரபல நாட்டிய கலைஞரான சுதாராணி ரகுபதி.

“நல்ல கலை மிருகத்தைக்கூட மனிதனாக்கும், மனிதனை தெய்வமாக்கி விடும். அகத்தில் இருக்கிற ஈகோ அழிந்து போனால் தான் மற்ற கலைஞர்களுடன் ஒன்ற முடியும்.

எங்களுக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. ஒன்று சேர்ந்து ஆடினோம். பார்வையாளர்களைக் கவர்கிற வசீகரம் உள்ளவர் பத்மா. நடனத்தில் எந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் முழுக்க ஒன்றிவிடுகிற கலைஞர்.

என்னைப் போன்ற பல நடன கலைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி பத்மா” – சக கலைஞரை பற்றி நட்புடன் வியந்து பேசுகிறார், இன்னொரு பரத கலைஞரான சித்ரா விஸ்வேஸ்வரன்.

அப்பா சினிமா டைரக்டராக இருந்தும், சிறுவயதில் சினிமாவில் நடித்திருந்தும், சத்யஜித்ரே, ராஜ்கபூர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் அழைத்தும் கூட சினிமாவில் நடிக்க விருப்பமில்லை பத்மாவுக்கு.

‘சினிமாவின் சிறப்புகள் தெரிந்திருந்தாலும், நாட்டியத்தில் இருக்கிற ஈடுபாடு குறைந்து விடக்கூடாது’ என்று வாய்ப்புகளை மறுத்து இருக்கிறார்.

பத்மாவின் நாட்டியத்திற்கு பலவிதங்களில் உதவியாக இருந்திருப்பவர் அவரது அண்ணி சியாமளா பாலகிருஷ்ணன்.

பத்மாவும், அவரும் சேர்ந்து நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து ஒரு எல்.பி. ரெக்கார்டாக வெளியிட்டபோது நாட்டுப்புறப் பாடல்களை கூடவே இருந்து ஒருங்கிணைத்தவர்கள் இளையராஜாவும், கங்கை அமரனும்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அந்த ரெக்கார்டில் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாட்டை பாடினார் பத்மா சுப்பிரமணியம். (சிறுவயதில் பத்மா பாடக் கற்றுக்கொண்டது சினிமா இசையமைப்பாளர் சலீல் சௌத்ரியிடமும் இசைக் கலைஞர் பி.வி. லட்சுமணனனிடமும்)

பத்மாவுக்கு பெருமையான விஷயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்ட நடராஜர் ஆலயத்தில் இடம்பெற்ற சிற்பங்களை வடிவமைக்கும் பணியை ஏற்று செய்து முடித்திருப்பது. அந்த பணியை பத்மாவிடம் ஒப்படைத்தவர் காஞ்சிப் பெரியவர்.

தென்னாப்பிரிக்கா, தென் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் தவிர பல நாடுகளில் இவரது நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.

ரஷ்ய மியூசிக் கம்போஸரான சைக்கோவ்ஸ்கியின் பிரபலமான இசைத் தொகுப்பின் ஒரு பகுதியை எடுத்து அதன் பின்னணியில் ராமாயண ஜடாயு மோட்சத்தை ரஷ்யாவில் குறுகிய காலத்தில் நிகழ்த்திய போது ஏக வரவேற்பு.

இதே மாதிரி ஜப்பானில் உள்ள பிரபலமான இசை அமைப்பாளரின் இசைத் தொகுப்பையும், இந்திய கதையையும் இணைத்து நடத்திய போதும் மனம் திறந்த பாராட்டு.

கூடவே ஆசிய அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதற்கான ‘ஃப்க்யூக்கோ’ விருது. தவிர சோவியத் நாடுகளிலிருந்து ‘பத்மஸ்ரீ’ உட்பட பல விருதுகள்.

ஜெர்மனியிலிருந்து ஒரு முறை இந்தியாவுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, எரிபொருளுக்காக பாகிஸ்தானில் விமானம் நின்றிருக்கிறது.

பத்மாவும் அவரது அண்ணி சியாமளாவும் ஏர்போர்ட்டில் இறங்கி தங்களைப் பற்றி சொன்னபோது ராஜ உபச்சாரம்.

ஏதோ சொந்த வீட்டிற்கு இடையில் தடுப்பு சுவர் கட்டின மாதிரி இருந்திருக்கிறது அங்கே போனபோது.

“என் வீட்டில் இன்னொரு போர்ஷனுக்கு வந்த மாதிரி இருக்கு” என்று பத்மா சொன்னபோது நெகிழ்வடைந்து போயிருக்கிறார்கள் பாகிஸ்தானிய அதிகாரிகள்.

இந்திய சுதந்திர பொன்விழாவை ஒட்டி பத்மா தயாரித்திருந்த ஒரு நடன நிகழ்ச்சி வந்தே மாதரம்.

பாரதி, இக்பால், தாகூர், பக்கிம் சந்திரர் என்று பலரது பாடல்களையும் ஒருங்கிணைத்து விமர்சனத்துடன் ஒன்றரை மணி நேரம் நகரும் அந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு.

கனடாவில் நிகழ்த்திவிட்டு சென்னையில் நிகழ்த்திய போது வந்தே மாதரத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு சொன்னார் டி.என்.சேஷன், “பத்மா கலைக்காகவே தொண்டாற்றின குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் எப்போதும் ஒரு தனி நபரில்லை. அவர் பரதத்தின் இயக்கம்.” – படபடவென பேசும் ரஜினி அதே ஸ்டைலில் பத்மா பற்றி சொல்கிறார், “கலைஞர்கள் எல்லோரும் கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள். பத்மா மிகவும் அருகில் இருக்கிறார்.

அதனால் தானோ என்னவோ, அவர் திருமணம் செய்து கொள்வதை கூட கடவுள் அனுமதிக்கவில்லை. முதல் தரமான கலைஞரான அவரிடம் இருப்பது தகுதியான மனது. அதைவிட தகுதியான வாழ்க்கை.”

“கல்லூரி நாட்களிலேயே அவர் ஒரு இன்டலக்சுவல் ரிபல் (Intellectual ripple)” என்று ‘பொக்கே’ கொடுத்த மாதிரியான பாராட்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனிடமிருந்து.

சுதந்திரத்திற்கு முன்பு பிறந்த பத்மா சுப்பிரமணியம் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நினைக்கவேயில்லை.

பத்மாவின் அம்மாவுக்கு இதுகுறித்த வருத்தம் இருந்தாலும், இவருக்கு அது ஒரு பிரச்சனையே இல்லை. இருப்பது அண்ணன் பாலகிருஷ்ணனின் குடும்பத்துடன்.
“எங்க அண்ணா பாலகிருஷ்ணன், மன்னி சியாமளா எங்க கண்ணே அவங்க தான்.

அவங்க இல்லைன்னா நான் இந்த அளவுக்குச் சாதிச்சிருக்க முடியாது” என்கிற பத்மா, தனக்கு உறுதுணையாக இருந்த மன்னி சியாமளா இறந்ததற்குத் துக்கப்படுகிறாா்.

மத்திய அரசின் ஃபிலிம் டிவிஷன் பத்மாவைப் பற்றி ஒரு டாகுமெண்ட்ரி தயாரித்திருக்கிறது.

அடையாறை ஒட்டியுள்ள மரங்கள் அடர்ந்த வீட்டின் ஒரு பகுதியின் நடனப் பயிற்சி ஹால். குருகுலம் மாதிரி உடனிருந்து கற்றுக்கொள்ளும் மாணவ மாணவிகள்.
பலரையும் உற்சாகப்படுத்துகிறார். நாட்டியக் கலைஞர்களைக் குறித்துச் சினேகிதத்துடன் பேசுகிறார்.

“முதலில் நம் மேல் தன்னம்பிக்கை வரணும்ங்க. அப்படி வந்துட்டா மற்றவங்ககிட்டே இருக்கிற திறமைகளைக் பார்த்துப் பாராட்டத் தோணும். பொறாமைப்படத் தோணாது.
யாரிடமும் பிரச்சனையும் இருக்காது.

அந்த மாதிரி மனநிலை வாய்ச்சிருக்கிறதே சந்தோஷமா இருக்கு. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடாம ஆடிக்கிட்டிருக்கேன். இனியும் ஆடுவேன். மூச்சு இருக்கிற வரை ஆட்டமும் இருக்கு… இதைவிட நிறைவான வாழ்க்கை வேறென்ன இருக்கு… சொல்லுங்க…”

முகபாவம் மாறி பரவசத்துடன் சொல்கிறார் பத்மா. கண்களில் மெல்லிசான நீர்த்திரை.
பின்னிணைப்பு :

“நடனம் உயிர் மூச்சு மாதிரி”

“நாட்டியக் கலைஞர்கள் பலருக்கு முகத்தில் மட்டும்தான் பாவங்கள் மாறிக்கொண்டிருக்கும். பத்மாவுக்கு உடம்பே மொழியாகப் பேசும்” என்று பத்மாவைப் பற்றி பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் சொன்னதில் தப்பில்லை.

மழை மெல்லியதாகத் தூறல் போட்டு கொண்டிருக்கையில் அவரது வீட்டில் பத்மாவிடம் பேசினோம்.

சாதாரண நூல்புடவை கட்டினபடி சிலவற்றை விவரித்துப் பேசும்போது விழி விாிந்து, முகபாவங்கள் அலைபாய்கின்றன. பேச்சில் சமயங்களில் கீச்சுக்குரல் தலைகாட்டுகிறது.

“எப்பவும் நண்பர்களைத் தேர்ந்தெடுத்து விடலாம். அப்பா அம்மாவைத் தேர்ந்தெடுக்க முடியாது. அது கடவுள் கொடுத்த வரப் பிரசாதம்.

அந்த விதத்தில் நான் கொடுத்து வைத்தவள்” – சிரிக்கிறார்.

“நான் பிறந்தது மயிலாப்பூரில் இருந்த எங்க வீட்டில். பெரிய வீடு அது. வீட்டிலேயே நிறைய பாடல், டான்ஸுக்கு ரிகர்ஸல் நடக்கும். எங்க அம்மா வீணை, வயலின் நல்லா வாசிப்பா.

அப்பாவும் கலைஞர். அதனால் எனக்கு பரதத்தில் ஈடுபாடு வந்ததில் ஆச்சரியமில்லை. நான் பிறந்த போது எங்க வீட்டில் தங்கியிருந்து டான்ஸ் கத்துக்கிட்டவங்க பத்மினி.
ஆறு வயதில் நடனம் கத்துக்க ஆரம்பிச்சுக் கொஞ்சங் கொஞ்சமாக இன்வால்வ்மெண்ட் கூடி, நடனமே உயிர் மூச்சு மாதிரி ஆயிடுச்சு.

என்னோட படிப்பு, ஆய்வு வாழ்க்கை முழுக்க நடனம் சம்பந்தப்பட்டதா மாறிட்டது. ஏழெட்டு வயசிலேயே ஓவியங்களை வரைய ஆரம்பிச்சேன். பிறகு போட்டோகிராபியில் கவனம் திரும்பிச்சு.

பல கோவில்களுக்குப் போனப்போ சிற்பங்களில் இருக்கிற அந்த பொஸிஷன் ஒரு ஸ்டில் காமிரா போட்டோ மாதிரித் தோணும். அதற்கு முன்பும், பின்பும் நிறைய அசைவுகள் இருப்பது மாதிரி தோணும்.

இந்த பாவங்கள் ஏன் நாட்டியத்தில் இல்லாமல் போச்சுன்னு கோவில் கோவிலா இந்தியா முழுக்கவும், தாய்லாந்து, இந்தோனேசியா வரைக்கும் போய் ஆய்வு பண்ணினேன்.

அப்போதுதான் நாட்டிய சாஸ்திரம் என்கிற நூல் பொதுவானதாக இந்தியா முழுக்க சிவில் கோர்ட் மாதிரி இருந்திருப்பது தெரிஞ்சது. அதைத்தான் என்.பி.ஹெச்.டி ஆய்வில் சொல்லியிருக்கேன்” என்றவர் பேச்சின் திசையை மாற்றுகிறார்.

இன்னைக்கும் தொடர்ந்து ஆடிக்கிட்டிருக்கேன். சாப்பிடுற மாதிரி தினமும் அதற்காகப் பயிற்சி செய்கிறேன்.

என்னுடைய நடன பாவங்கள் எல்லாருக்கும் புாியறதாலேயே சாஸ்திரத்துக்கு விரோதமா இருக்குங்கிறாங்க.

நான் அதை ஒத்துக்கலை. எளிமையாக, ஆயாசம் இல்லாமல் புரிய வைக்கணும். அதுதானே முக்கியம். எனக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ அதைத் தான் இப்போ பண்ணிக்கிட்டு இருக்கேன்.

இனியும் பண்ணுவேன். எப்படியோ பகவான் கொடுத்த இந்த ஜென்மத்தைச் சரியாய் பயன்படுத்தி இருக்கேன்னு தோண்றது”.

வீட்டில் பரதம் கற்றுக் கொள்ளும் பல மாநிலம் சார்ந்த மாணவ, மாணவிகள் வீட்டை விட்டு வெளியே போகும்போது கீழே விழுந்து நமஸ்கரித்து பத்மா நெற்றியில் பொட்டு வைத்ததும் கிளம்புகிறார்கள்.

“என்னோட அப்பா சாகுறப்போகூட இந்த கலையை பண வசதி இல்லாதவங்களுக்கு இலவசமாகத் தான் கற்று கொடுக்கணும்னார். அதைத்தான் பண்ணிக்கிட்டிருக்கேன்.
நான் சேகரித்த நல்லதை இவங்களுக்குக் கொடுத்துக்கிட்டிருக்கேன்…” வயதுகளை ஒதுக்கி வைத்து ஒரு குழந்தை முகபாவத்துடன் சொல்கிறார் பத்மா சுப்ரமணியம்.
*
பரிதி பதிப்பகம் வெளியிட்ட மணாவின் ‘நதிமூலம்’ தொகுப்பிலிருந்து…

You might also like