சென்னையில் மட்டும் சுமார் 63 லட்சம் வாகனங்கள்!

சென்னையில் சுமார் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீத வாகனங்கள் அதிகரிக்கின்றன.

இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்தன.

இதைக் கருத்தில் கொண்டு 30 நவீன ‘ஸ்பீடு ரேடார் கன்’ கருவிகள் நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன.

கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி அறிவிப்பின்படி, சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் 40 கி.மீ. வேகத்தைத் தாண்டியும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகத்தைத் தாண்டியும் வாகனங்களை ஓட்டிச் சென்றால் வழக்குப் பதியப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்தது.

இதற்கு பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன. இதன் விளைவாக வேக கட்டுப்பாட்டை மறுமதிப்பீடு செய்து, வேக வரம்பை மாற்றியமைக்க சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் காவல் ஆணையா் தலைமையில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினா், டெல்லி, மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட இடங்களில் உள்ள வாகன வேக வரம்பு, சாலை கட்டமைப்பு வசதி, விபத்துகளின் எண்ணிக்கை போன்றவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்தனா்.

அதன்படி சென்னையில் கார், மினி வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், பேருந்து, லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என பரிந்துரைத்தது. குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து வகை வாகனங்களும் 30 கி.மீ. வேகத்துக்குள்தான் செல்ல வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

இந்த நிலையில், இந்த புதிய வேகக் கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை மீறும் வாகன ஓட்டிகளிடம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் வசூல் செய்யப்படும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

You might also like