ஏற்கும் கதாபாத்திரத்தில் பொருந்தும் இயல்பு கொண்ட கேபிஎஸ்!

திரைப்படத் தொழில் நுட்பம் போன நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு. முதலில் ஒளிப்படங்கள் மட்டுமே வந்தன. பேசாத படங்களே வெளியாயின.

பேசாத படங்கள் என்பதால் மக்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் இந்தியாவில் பக்தி படங்களே அதிகம் உருவாகி மகிழ்வித்து வந்தன. பேசும் படங்கள் வந்தபின்பும் அது தொடர்ந்தது.

1950 வரை பெரும்பாலும் எல்லா மொழிகளிலும் புராணப்படங்களே உருவாகின. திரையில் பக்தியை வளர்த்த மகாகலைஞர்கள் பலரும் மக்களின் விருப்பத்துக்குரிய சூப்பர் ஸ்டாராக விளங்கினார்.

அதில் முக்கியமானவர் கொடுமுடி கோகிலம் என்று அண்ணாவால் பாராட்டப்பட்ட கே பி சுந்தராம்பாள்.

தேசிய விடுதலையில் ஈடுபட்டு காந்தியாரால் பாராட்டப்பட்டு, காங்கிரஸ் இயக்கத்தின் வெற்றிக்கு பாடுபட்டு நாத்தீகர்களின் தாக்குதலுக்கு தன் பாடல்களால் பதிலடி கொடுத்தவர் கேபிஎஸ்.

கே.பி. சுந்தராம்பாள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றால் அதில் அப்படியே பொருந்திவிடும் இயல்பு கொண்டவர்.

அவரை, ஔவையாக காரைக்கால் அம்மையாக கௌந்தி அடிகளாக பக்த நந்தனாராகத்தான் காணமுடியுமே தவிர ஒரு நடிகையாகத் திரையில் காணவே முடியாது. அதற்கு ஒரு சம்பவம் உதாரணம் உண்டு,

கேபி. சுந்தராம்பாள் பக்த நந்தனாரில் நடித்தபோது அவரோடு வேதியராக நடித்தவர் விஸ்வநாத அய்யர். வேதியர் பக்த நந்தனாரிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சி.

“நந்தனாரே! உன்பெருமையை அறியாமல் மோசம் போனேனே..!” என்று சொல்லி வேதியர் நந்தனார் காலில் விழவேண்டும். விஸ்வநாத அய்யர் எந்த மறுப்பும் இன்றி நடித்துமுடித்தார்.

படம் வெளியானபோது சிலர் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தினர். ‘விஸ்வநாத அய்யர் போன்ற கலைஞர்கள் ஒரு பெண்ணில் காலில் விழுந்து வணங்கலாமா’ என்று கேட்டனர். அதற்கு விஸ்வநாதன் சொன்ன பதில் மிகவும் முக்கியமானது.

கே.பி.எஸ்ஸை, தான் அந்தப் படம் முழுவதும் நடமாடும் நந்தனாகவே கண்டதாகச் சொல்லி “கே.பி.எஸ் என் முன்னால் ஒரு தெய்வம் போல் நின்றார், அடுத்த கணம் அவர் காலில் என்னையும் அறியாமல் விழுந்து வணங்கி விட்டேன்.

மேலும் கலைஞர்களான எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது” என்று கூறி பதிலடி கொடுத்தார்.

அப்படி மாற்று சொல்லமுடியாத நடிகர், பாடகர் கேபி. சுந்தராம்பாள். ஔவை என்று சொல்லிக் கண்ணை மூடிக்கொண்டால் நம் மனத்திரையில் தோன்றும் உருவம் கே.பி.எஸ் தான் என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?

இப்படி பக்திப்படங்களில் நடித்துப் பாடல்கள் பாடி நன்னெறியைப் பரப்பிவந்த சுந்தராம்பாளின் வைராக்கியம் பெரிது. ‘பணத்துக்காக எந்த வேடத்தையும் ஏற்க மாட்டேன்’ என்று கொள்கையோடு இருந்தவர் சுந்தராம்பாள்.

– நன்றி: விகடன் இதழ்

You might also like