அடுத்த 3 மாதங்களுக்கு எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

டெங்கு காய்ச்சலால் நாள்தோறும்  30 பேர் வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சுகாதரத்துறை உயரதிகாரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கலந்து உள்ளிட்ட பலர் கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கேரளாவில் நிஃபா வைரஸ் பரவல் எதிரொலியாக எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில் உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவருக்கு டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்பு இல்லை.

டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொசு ஒழிப்புக்கான மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பில் உள்ளது என்றார்.

தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது வழக்கமானது என்றும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

You might also like