சமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!

இயற்கை மருத்துவர் போல பேசிய இயக்குநர் வெற்றிமாறன்

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் வெற்றி மாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி சிறப்பித்தார்.

ஆரோக்கியம் சார்ந்த பல தகவல்களையும் பத்திரிகையாளர்களின் நலன் குறித்தும் நிறைய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “உங்களுக்கும் சரி எனக்கும் சரி சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு வாழ்வது என்பது அரிதான காரியம். ஆனால் நேரத்திற்கு சீரான உணவு எடுத்துக் கொண்டாலே நல்ல தூக்கம் என்பது தானாகவே கிடைக்கும். எப்போது தூங்கினாலும் சரி ஆழமான தூக்கம் அவசியம்.

நண்பர்களுடன் இணைந்து 2000 வரையிலும்கூட செலவிட்டு பார்ட்டி போன்ற விஷயங்களில் நம் நேரத்தை செலவிடுகிறோம். ஆனால் அதிகாலையில் எழுந்து சின்ன சின்ன உடற்பயிற்சிகளேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவ்வளவு சுலபமாக வருவதில்லை. பெண்கள் வீட்டில் வீணாகப் போகிறதே என்று நினைத்தே பழைய உணவுகளை சாப்பிட்டு, ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.

திட்டமிட்டு சமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது மீதம் ஆகிவிட்டால் யோசிக்காமல் மற்றவர்களுக்கு கொடுத்து விடுங்கள். கடைசியாக ஆரோக்கியத்தை பற்றி நினைத்து எந்த பயனும் இல்லை. அதேபோல உணவை சரியாக கணக்கிட்டு சாப்பிட நம்மால் முடியும். பொதுவாகவே முதலில் நார்ச்சத்து கொண்ட ஆகாரங்கள், அடுத்து புரதம் கடைசியாக தான் கார்போஹைட்ரேட் என்னும் வழக்கத்தை எப்போது உணவில் அமர்ந்தாலும் பழக்கப்படுத்திக் கொண்டாலே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

உதாரணத்திற்கு முதலில் காய்கறிகளை எவ்வளவு அதிகமாக எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு அதிகமாக எடுத்துக்கொண்டு அதன் பிறகு சாதம் என வழக்கமாக்கிக் கொள்ளலாம், இது பிரியாணியை எடுத்துக்கொண்டாலும் சரி, போதுமானவரை கறி துண்டுகளை முதலில் சாப்பிட்டுவிட்டு பின்னர் பிரியாணியை சாப்பிடும் பொழுது சாப்பிடும் அளவும் குறைவாகும். இன்சுலின் அளவிலும் மாற்றங்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்” என்று உடல்நலக் குறிப்புகளை ஒரு மருத்துவர்போல பேசினார் வெற்றிமாறன்.

பிறகு பத்திரிகையாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும் சுவாரசியமான பதில்களை அளித்தார்.

“வடசென்னை பாகம் 2 நிச்சயம் வரும். அதற்கு முன்பு இன்னும் இரண்டு பட வேலைகள் இருக்கின்றன அதை எல்லாம் முடித்துவிட்டு நிச்சயம் வடசென்னை பாகம் 2 ஆரம்பிக்கப்படும். சூரியை நாயகனாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது அசுரன் பட வேலையிலேயே முடிவு செய்துவிட்டேன்.

அஜ்னபி என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க நினைக்கும் ஒருவனை அடிப்படையாகக் கொண்ட கதையாக உருவாக்க நினைத்தோம். படப்பிடிப்பிற்கான இடங்கள் எல்லாம் தேர்வு செய்து படப்பிடிப்பை ஆரம்பிக்கும் தருவாயில் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்துவிட்டது அதனால் ஏன் அந்த படத்தை துவங்க இயலவில்லை” என்றார்.

You might also like