உளவியலை புதுமையான கோணத்தில் அணுகும் ஈடாட்டம்!

சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகர் ஸ்ரீகுமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஈடாட்டம்’ எனும் திரைப்படம், குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களின் உளவியலை புதுமையான கோணத்தில் அணுகி இருப்பதாக பட குழுவினர் பிரத்தியேகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதை களத்திற்கும், புதுமையான கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே உண்டு என்பதை நன்கறிந்து தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஈடாட்டம்’.

இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஈசன்.

இப்படத்திற்கான திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை மற்றும் வசனத்தை கஜபதி எழுதி இருக்கிறார்.

இதில் ஸ்ரீகுமார், நடிகர் ராஜ சூர்யா நடிகைகள் வெண்பா, அனு கிருஷ்ணா, தீக்ஷிகா, விஜய் விசித்திரன், ‘காதல்’ சுகுமார், பவர் ஸ்டார், ‘பூவிலங்கு’ மோகன், புலிக்குட்டி, விஜய் சத்யா, சாந்தி ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்திருக்கிறார். ஜென் முத்துராஜ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை செந்தில் மேற்கொண்டிருக்கிறார்.

புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஈசன் மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்தி அருண் கேசவன்      தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி விளக்கமளித்த இயக்குநர்,

”கதையின் நாயகனான சரவணன், யாஷிகா என்ற பணக்கார பெண்மணியின் வீட்டில் கார் டிரைவராக குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகிறார்.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், பணத் தேவைக்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார். பிறகு பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் தொடங்குகிறார்.

இந்தச் சூழலில் மூவர் கொலை செய்யப்படுகிறார்கள். அதிலிருந்து அவர் தப்பிக்கிறாரா என்பதே கதை. சுவாரசியம் குறையாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது” எனக் கூறினார்.

You might also like