முடிந்தளவு மாசில்ல பூமியை உருவாக்குவோம்!

உலக பெருங்கடல் நாள் வரலாறு ஐக்கிய நாடுகளின் வலைத்தளத்தின்படி, உலக கடல்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டில் இந்த நாள் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.

அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக பெருங்கடல் தினம் முக்கியத்துவம்

பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல் மார்க்கமாகவே கையாளப்படுகிறது.

கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, ஆக்சிஜன் எனும் உயிரிவாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது.

மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.

உலகின் கடல்களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்கிற வகையிலும், ‘உலக பெருங்கடல்கள் நாள்’ ஆண்டுதோறும் அவதானிக்கப்படுகிறது.

கடல் ஆக்சிஜன், காலநிலை கட்டுப்பாடு, உணவு மூலாதாரங்கள், மருத்துவம், மற்றும் இன்னும் பல வளங்கள் மற்றும் சேவைகள் நமக்கு வழங்குகிறது.

உலக பெருங்கடல்கள் நாள், பெருங்கடல் மற்றும் அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, மற்றும் சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) எனும், நெடுங்காலம் அழியாத்தன்மை உடைய நெகிழியின் குப்பை கடல்களைச் சீரழிக்கிறது.

பிளாஸ்டிக் குப்பையைக் கடலில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த ஆண்டின் மையப்பொருளாக உள்ளது.

நேரடியாகக் கடலில் பிளாஸ்டிக் குப்பை போடப்படுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், பெருமளவு நெகிழியின் கழிவு கடலில் கலக்கிறது.

இதுபோன்ற கழிவுகள் கடலில் சேரும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குகளாகிவிடுகிறது.

நுண் உயிரினங்களும், சிதையாத நெகிழிப் பைகளை ஆமை போன்ற உயிரினங்களும் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் கடல் உணவு வழியாக மனித உடல்களுக்குள் நெகிழி புகுந்துவிடுகிறது.

எனவே நம்மால் முடிந்த அளவு பூமியை மாசில்லாமல் மாற்றுவதற்கு முயற்சி செய்வோம். 

  • நன்றி: முகநூல் பதிவு
You might also like