இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான பார் மூடல்!

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள மீன்சந்தை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு, நேற்று காலை 11 மணி அளவில், மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி என்பவர், சிறிது நேரத்தில் வலிப்பு வந்து உயிரிழந்தார்.

அதே இடத்தில் கள்ளச் சந்தையில் மது வாங்கிக் குடித்த 36 வயதான விவேக் என்ற மீன் வியாபாரியும், மது குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தஞ்சையில் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மதுவை குடித்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், சட்டவிரோதமாக மது விற்ற பார் மற்றும் டாஸ்மாக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பார் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த குப்புசாமி, விவேக் ஆகியோரின் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

அதில் இருவரின் உடல்களிலும் சயனைடு இருப்பதும், அவர்கள் அருந்திய மதுவிலும் சயனைடு இருப்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை கொலை செய்வதற்காக மதுவில் சயனைடு கலக்கப்பட்டதா? அல்லது சயனைடு கலந்த மதுவை குடித்து இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like