இந்திய அளவில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி!

தமிழ் சினிமாவில் கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து கதாநாயகிகளை அழைக்க வந்து நடிக்கவைத்து வரும் அளவுக்கு தமிழ் நடிகைகளின் எண்ணிக்கை குறைவே.

ஆனால், சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தும் விதமாக தமிழ்ப் பெண்களும் நடிப்புலகை நோக்கி நகர்ந்துவருகின்றனர்.

தாமி என்கிற படத்தில் அறிமுகமாகிறார் நடிகை சுவிதா ராஜேந்திரன். திருச்சியைப் பூர்விகமாகக் கொண்டவர்.

எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வந்தார். இயல்பிலேயே சிறுவயதிலிருந்து இவருக்குள் இருந்த நடிக்கும் ஆசையால் முதலில் மாடலிங்கில் நுழைந்தார்.

தற்போது தாமி என்ற படத்தின் மூலம் நடிப்பு பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

நான்கு பையன்கள் நான்கு பெண்கள் என ஒரு ஜாலியான படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுவிதா.

இன்னொரு முக்கிய கதாநாயகியாக நடிகை சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார்.

சினிமாவிற்குள் நுழைந்த அனுபவம் குறித்துப் பேசிய சுவிதா ராஜேந்திரன், “எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

இத்தனைக்கும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சினிமா பின்னணி கொண்டவர்கள் இல்லை.

படிப்பை முடித்த பின்பு நடிக்கச் செல்கிறேன் என்றபோது ஆரம்பத்தில் பெற்றோர்கள் தயங்கினார்கள்.

பிறகு சென்னைக்கு வந்து மாடலிங் துறையில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவுக்கு என்னை தயார்படுத்திக்கொண்டேன்.

அதேபோல கூத்துப்பட்டறை கலைஞர் ஒருவரிடம் நடிப்பு பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். இயக்குநர் பிரவீன் சொல்லிக் கொடுத்ததை பின்பற்றி வெகு இயல்பாக நடித்துள்ளேன்.

முதல் படம் என்றாலும் படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் ஒரே பரபரப்பாக இருந்ததால் பெரிய அளவில் ஜாலி, கலாட்டா என இல்லாமல் எந்நேரமும் வேலை மட்டுமே பிரதானமாக இருந்தது.

ஒரு பக்கம் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தாலும் படங்களில் நடிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன்.

ரசிகர்கள் மனதில் நிற்கும்படியான நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்” என்று மனந்திறந்து பேசினார்.

You might also like