தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம்!

– உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், “தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகளில் தமிழை பயன்படுத்தாமல், ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.

கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் வணிக நிறுவன பெயர் பலகைகளில், அவரவர் தாய் மொழியே முதன்மையாக இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் அரசு அலுவலக பெயர் பலகைகளில் ஆங்கிலம் பெரிய எழுத்துக்களாகவும், தமிழ் சிறிய எழுத்துக்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழக அரசின் ஆணைப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், நிறுவனங்களில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்த வேண்டும்.

5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகைகள்தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு 1982 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.

அப்போது, “தமிழ்நாட்டில் அரசின் ஆணைப்படி தொழில் நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும்; முதல் முறை ஒரு தொகையும், மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம் விதிக்க வேண்டும்.

அபராத தொகையை உயர்த்தும் பரிந்துரை மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்”  என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த 2018-22 வரை 6,047 கடைகளில் ரூ.4.58 லட்சமும், 349 உணவகங்களிடம் இருந்து ரூ.32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like