போதைப் பொருள் புழக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் ஆய்வுப் பணிகளை சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் காவல் துறையினர் இடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் சாதிக் கலவரங்கள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும். குற்றச்சம்பங்களை தடுக்க காவல் துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்” என்றுக் கேட்டுக்கொண்டார்.

You might also like