லவ் டுடே 100வது நாள்: மிகப்பெரிய நம்பிக்கையை தந்த படம்!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது.

அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இப்படம் தமிழ் சினிமாவில் நூறாவது நாளை கடந்த படமாக சாதனை படைத்துள்ளது. மிகப்பிரமாண்ட நடந்த 100 வது நாள் விழாவில் தமிழ் சினிமாவின் முன்னனி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு ஷீல்ட் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பேசிய எடிட்டர் மோகன், “ஏஜிஎஸ் உடைய புகழ் காலம் காலமாக நிலைத்து நிற்கும். தனித்துவமான படங்களை அவர்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். பிரதீப் முதல் படமும் வெற்றியை கொடுத்தார், இரண்டாவது படமும் இன்று வெற்றியை கொடுத்து நாயகனாக இருக்கிறார்” என்றார்.

இயக்குநர் மோகன்ராஜா, ”ஏஜிஎஸ் எனது குடும்பம் போன்றது. ஏஜிஎஸ் உடன் நான் 16 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். எனது வாழ்கையில் மிகமுக்கியமான தனி ஒருவன் படம், ஏஜிஎஸ் -ஆல்தான் தயாரிக்கப்பட்டது. லவ்டுடே திரைப்பட வெற்றிக்கு படக்குழுவினர் மிகவும் தகுதியானவர்கள். பிரதீப் பலருக்கு இன்ஷ்பிரேசன்” என்று பாராட்டினார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, “இந்த படத்தின் இசையை பொறுத்தவரை எனது குழுவிற்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியர் பிரதீபிற்கும் என் நன்றி. இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன், இது ஹிட் என்று நான் முடிவுக்கு வந்துவிட்டேன். இந்தப் படம் ஏஜிஎஸ் -க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது, அதற்கு வாழ்த்துகள்” என்றார்.

நடிகை இவானா, “படத்தின் வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த வெற்றி விழா மேடையில் நான் இருப்பது என் வாழ்க்கையின் மிகமுக்கியமான தருணம். இயக்குநராகவும், நடிகராகவும் பிரதீப் ஒரு மிகச்சிறந்த மனிதர். இந்த படக்குழு கொடுத்த அரவணைப்பு எனது வாழ்கையின் மிக முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறதது” என்று நெகிழ்ந்தார்.

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “கொரோனாவிற்கு பிறகு பல திரைப்படங்கள் வெளியாயின. லவ்டுடே போன்ற பெரிய ஹீரோ இல்லாத படத்தை எப்படி வெளியிட போகிறீர்கள் என்று பலர் கேட்டபோது, இயக்குநர் முழு நம்பிக்கையுடன் இருந்தார். இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை தந்துள்ளது” என்றார்.

இயக்குநர் நடிகர் பிரதீப் ரங்கநாதன், “ஒரு புதுமுகத்தை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க பலர் முன் வரமாட்டார்கள். ஆனால் ஏஜிஎஸ் அதற்கு முன்வந்தார்கள். அதோடு அவர்கள் எனக்கு இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பெரும் சுதந்திரம் தந்தார்கள். அதற்கு ஒட்டுமொத்த ஏஜிஎஸ் குழுவிற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

எனது தொழில்நுட்பக் குழு, அவர்களது பணி அளப்பறியது. அவர்களும் நடிகர்களும் இந்தப் படத்தை மேம்படுத்தினார்கள். அதன் பிறகு மக்கள் கொடுத்த ஆதரவில்தான் இந்த படம் பெரிய படமாக மாறியது” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

You might also like