அடுத்த நிலநடுக்கம் இந்தியாவில்?

– துருக்கி நிலநடுக்கத்தைச் சரியாக கணித்த நெதர்லாந்து ஆய்வாளர் எச்சரிக்கை

துருக்கி – சிரியா எல்லையில் கடந்த 6-ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது.

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15000 தாண்டியது.

இந்நிலையில், இந்த நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே ஒருவர் துல்லியமாக கணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தை, மூன்று நாட்களுக்கு முன்பே அப்பகுதியில் வலிமையான நிலநடுக்கம் ஏற்படும் என்பதை நெதர்லாந்து ஆய்வாளர் ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் கணித்திருந்தார்.

புவியியல் ஆராய்ச்சியாளரான பிரான்க் ஹூகர்பீட்ஸ் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி அன்று தனது டுவிட்டர் பக்கத்தில்,

“மத்திய – தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கூடிய விரைவில் அல்லது தாமதமாக பதிவாகும்” என்று கூறியிருந்தார்.

அப்போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தற்போது அவரின் இந்தப் பதிவு வைரலாகியுள்ளது.

இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரான்க் ஹூகர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது அனைவரையும் பீதி அடைய வைத்துள்ளது.

You might also like