தயாரிப்பாளரின் லாபத்தை வைத்தே என் சம்பளம்!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன். சென்னையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகை ரித்திகா, “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை சண்டைபோட்டு வாங்கினேன்.

ஆர்.ஜே.பாலாஜியும், ஐஸ்வர்யா ராஜேஷும் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தேடுத்து பணியாற்றுவார்கள். யுவாவும், கிருஷ்ணகுமாரும் வேகமாக பணியாற்ற கூடியவர்கள்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் நடிப்பீர்களா? என்று தெரியவில்லை என்றார்கள்.

அப்படியென்றால், நான் முதலில் கதை கேட்கிறேன் என்று கூறினேன். என் வீட்டிற்கு இயக்குநர் கிருஷ்ணகுமார் வந்து கதை கூறினார்.

கதையையும், கதாபாத்திரத்தையும்விட கிருஷ்ணகுமாரின் மலையாளம் கலந்த தமிழ் எனக்கு பிடித்துவிட்டது.

அவருக்காக நான் நடிக்கிறேன் என்று கூறினேன். ஒரு நல்ல மனிதரை சந்தித்த திருப்தி கிடைத்தது”என்றார்.

நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது போல் தான் கிருஷ்ணகுமார் சார் வீட்டிற்கு வந்து சிரித்துக்கொண்டே கதை கூறினார். இந்த படத்தில் 33 வது மாடியின் பால்கனி மீது ஏறி நிற்கும் காட்சி ஒன்று இருக்கும்.

மேலும், அந்த காட்சி நடிக்க கயிறு பயன்படுத்தலாம் என்று கேட்டேன். இல்லை அது யதார்த்தமாக இருக்காது. அதனால் நீங்கள் அப்படியே நில்லுங்கள் என்றார். நானும் பயமில்லாமல் நடித்து முடித்துவிட்டேன்.

அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் காட்சி அப்போது திடீரென எதிரில் லாரி வந்தது.

நான் அவரிடம் சார் லாரி வருகிறதே என்று கேட்டதற்கு “அதை நான் தான் அனுப்பினேன்” என சிரித்துக்கொண்டே வேலை வாங்கிவிட்டார். அந்த 7 நாட்கள் பாக்யராஜின் மறுபிறவி தான் இயக்குநர் கிருஷ்ணகுமார்.

படத்தின் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் அதிகபட்சமான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும். அதற்கான இளைஞர்கள் இப்போதே அவர்களின் நேரத்தைக் கொடுத்து உழைக்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது.

திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக்கொள்கிறோம்.

நன்றாக இல்லையா? அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம்.

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம்.

பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளரின் லாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன்” என்றார்.

You might also like