இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உள்துறை அமைச்சரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “16-11-2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உள்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது.

இந்திய தரப்பில் இருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரும் 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளது. 

எனவே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகினையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்” என முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

You might also like