காக்கை பறக்காத கள்ளிக்காடு!

துபாயில் வைரமுத்து பேச்சு

கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் 2003ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றதாகும். ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழி பெயர்த்து வருகிறது.

இந்தி – உருது – மலையாளம் – கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது.

‘தி சாகா ஆஃப் தி சாக்டஸ் லேண்ட்’ என்ற பெயர்கொண்ட அந்த நாவல், துபாயில் ‘ரைஸ்’ அமைப்பின் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது.

அட்லாண்டிஸ் ஓட்டலில் நடைபெற்ற விழாவில் கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டார்கள்.

மாநாட்டில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் நூலின் பிரதி வழங்கப்பட்டது.

நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் வைரமுத்து, “காக்கை பறக்காத எங்கள் கள்ளிக்காட்டு வாழ்க்கை சர்வதேச அரங்கில் அரங்கேறுவது குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

அரசர்களுக்கும் புராண புருசர்களுக்கும் மட்டுமே இதிகாசம் இதுவரை எழுதப்பட்டிருக்கிறது.

முதன் முதலாய் மண்ணின் மகனுக்கு, உழைக்கும் குடிமகனுக்கு, உண்மையாய் வாழ்ந்தவனுக்கு இந்த இதிகாசம் எழுதப்பட்டிருக்கிறது. இது மண்ணுக்கும் மனிதனுக்குமான தீராத போராட்டமாகும்.

‘எர்னஸ்ட் ஹெமிங்வே’ எழுதிய நோபல் பரிசு பெற்ற நூலுக்கு ‘கிழவனும் கடலும்’ என்று பெயர்.

நான் எழுதிய இந்த இதிகாசத்தை ‘கிழவனும் நிலமும்’ என்று சொல்லலாம். இரண்டுமே மானுடத்தின் வெற்றி பற்றியதாகும். தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை உலக வெளிகளில் உலாவிடுகிறேன்” என்றார்.

மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், நிறுவனத் தலைவர் ஜெகத் கஸ்பர் மற்றும் சர்வதேச நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

You might also like