மதம் பற்றிய ஆளுநரின் கருத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை!

– சபாநாயகர் அப்பாவு

நாட்டில் சிறப்பாக செயல்படும் சட்டமன்றங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படுகிறது. அதற்காக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் டெல்லி, பீகார், அசாம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சட்டசபை சபாநாயகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், சபாநாயகர் காகேரி தலைமையிலான அந்த குழுவின் 2-வது கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, டெல்லி சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், அசாம் மாநில சபாநாயகர் பிஸ்வஜித் டைமரி, பீகார், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களின் சட்டசபை சபாநாயகர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, “இந்திய இறையாண்மை பற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி வரும் கருத்துகள் குறித்து பலர் தங்களின் கருத்துகளை என்னிடம் கூறிக்கொண்டு தான் வருகிறார்கள். சபாநாயகர் என்ற முறையில் நான் இந்த விஷயத்தில் கருத்துகளைக் கூற முடியாது.

ஆனால் ஆர்.என்.ரவி ஆளுநராக கடந்த செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார். அப்போது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 159-ன்படி ஆளுநராக எனது கடமையை சிறப்பாக செய்வேன்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இந்திய இறையாண்மைக்கு எந்த பாதகமும் இல்லாமல், சாதி-மதத்திற்கு அப்பாற்பட்டு, இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதோடு, அதற்கு எந்த பாதகமும் வராதபடி செயல்படுவேன் என்று கூறினார்.

ஆனால் அளுநர் தற்போது இது மதம் சார்ந்த நாடு என்றும்,  மதம் குறித்து ஆளுநர் கூறும் கருத்துக்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் பல சட்ட மேதைகள், அரசியல்வாதிகள் என்னிடம் ஆளுநர் இவ்வாறு பேசுகிறாரே என்று கேட்டனர்.

ஆளுநராக பதவி ஏற்ற பிறகு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான வார்த்தைகளை அவர் பயன்படுத்துவது அந்த அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமான செயல்” என அப்பாவு தெரிவித்தார். 

You might also like