சர்வதேசப் பட விழாவில் ‘குரங்கு பெடல்’!

மதுபான கடை, வட்டம் திரைப்படங்களை இயக்கிய கமலக்கண்ணன் குரங்கு பெடல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ராசி அழகப்பனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிரபாகர் சண்முகம் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

1980 களின் கோடைக் காலத்தில் சேலம் (தற்போது நாமக்கல் மாவட்டம்) மற்றும் ஈரோடு மாவட்டங்களின் காவேரிக் கரையோர பகுதிகளை களமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படத்தில், குழந்தைகளுடன் காளி வெங்கட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உயிரோட்டமான பாடல்கள் மற்றும் சிறப்பான பிண்ணனி இசையின் மூலம் மக்களை கவர்ந்த ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருக்கிறார். பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு முதுகெலும்பாக அமைந்திருக்கின்றன.

காலா, பரியேறும் பெருமாள், சர்ப்பாட்டா பரம்பரை, குதிரை வால், ஜல்சா (ஹிந்தி) திரைப்படங்களுக்கு ஒலிக்கலவை செய்த அந்தொனி ரூபனின் ஒலிக்கலவை இத்திரைப்படத்தை உலகத்தரத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.

சுமீ பாஸ்கரன் தனது சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் இயக்குனரின் கற்பனையை அப்படியே திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இயக்குனர் பிரம்மா, என்.டி. ராஜ்குமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

1980களின் கோடைகாலத்தில் கத்தேரி என்கிற கிராமத்தில் சைக்கிள் ஓட்டத் தெரியாத ஒரு தகப்பனுக்கும், சைக்கிள் ஓட்டிப்பழகுவதில் ஆர்வமாக இருக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான கதையை இந்த திரைப்படம் விவரிக்கிறது.

இந்த நிலையில், கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ள இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் குரங்கு பெடல் படம் திரையிடப்பட உள்ளது.

இந்தப் படம் இந்தியன் பனோரமாவினால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட இருக்கிறது.

You might also like