ஏழைகளுக்கு விலை உயர்ந்த மருந்து கிடைப்பதில்லை!

– உயர்நீதிமன்றம் வேதனை

கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

அப்போது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு காய்ச்சல், இன்ப்ளூயன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன? என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.

மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, “அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் வினியோகிப்பது என்பது தீவிரமானது.

இதில் மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதாரத் துறைக்கும் தொடர்பு உள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை.

அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன” என வேதனை தெரிவித்தார். 

You might also like