இன்புளூயன்சா காய்ச்சலுக்கும் முகக் கவசம் அவசியம்!

-அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலால் (எச்1 என்1 வைரஸ்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளதால் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த அவர்,இதில் 5 வயதுக்கு உட்பட்ட 81 குழந்தைகளும், 5-14 வயதுக்கு உட்பட்டவர்களில் 62 பேரும், 15-65 வயதுக்கு உள்ளானவர்கள் 223 பேரும், 65 வயதுக்கு மேற்பட்டோர்களில் 99 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 269 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 186 பேர் தங்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைவலி, உடல்வலி, காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இந்த வைரசின் தாக்கம் பாதிப்பை உண்டாக்குகிறது.

அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டாலே அது போதும். அதற்கு முன்பு மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டும்.  இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முகக் கவசம் அணிவது அவசியம்.

ஐரோப்பிய நாடுகளில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு என தனி தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதேபோல் உலகில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவிற்கு என 5-வது தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் 4 ஆயிரத்து 193 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 10 லட்சத்து 89 ஆயிரத்து 529 பேர் பயன் அடைந்திருக்கின்றனர். கடந்த 2 மாதங்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது பெரிதாக இல்லை.

நாளொன்றுக்கு 400-ல் இருந்து 500-க்குள் தான் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது. இதனால் பதற்றமடைய தேவையில்லை. டெங்கு பாதிப்பை பொறுத்தவரை 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்” எனக் கூறினார்.

You might also like