அக்கப்போர் ஆகும் தொலைக்காட்சி விவாதங்கள்!

“ஏன் நீங்கள் இப்போது அதிகமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை?” – பொது இடங்களுக்குச் செல்லும்போது பயணங்களில் தெரிந்தவர்கள், அறிமுகமற்ற பலர் என்னிடம் அக்கறையோடு கேட்கும் கேள்வி.

ஆம், ஆறு, ஏழு ஆண்டுகளாக விவாதங்களில் பங்கேற்பது இல்லை.

இப்போது இங்குள்ள தொலைக்காட்சி விவாதங்களின் தரம் எப்படி இருக்கிறது?

நாடு, மக்கள் நலன் சார்ந்தல்ல, பிரச்சனைகளை விட வெறும் பரபரப்புக்காகவே ஒவ்வொரு நாளும் பேசக்கூடிய தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது குறித்துப் பேச அன்றைய சப்ஜெக்ட் குறித்து நன்றாகத் தெரிந்தவர்களை அழைப்பது குறைவு தான்.

விஷயம் தெரியாமல் ஏதோ கத்தக் கூடியவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து அழைக்கிறார்கள்.

ஆக, விவாதத்தில் என்ன நடக்கிறது? முழுமையாக விஷயம் தெரிந்த ஒருவர் விஷயமே தெரியாமல் கூச்சல் போடுகிற ஒருவருடன் ‘விவாதம்’ என்ற பெயரில் போட்டி போட வேண்டியிருக்கிறது.

யார் அதிகமாகக் கூச்சல் போடுகிறாரோ அவர் மீது நெறியாளர் மற்றும் பார்வையாளர்களின் கவனம் விழுகிறது. அவர்களுக்கே கூடுதல் நேரம் கிடைக்கிறது. அந்தச் சலுகையில் அவர்கள் தங்கள் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்கள்.

கொஞ்சம் கூடக் கூச்சமோ, நாகரீகமோ இல்லாமல் கொச்சையாக “அவன் மோடு முட்டி, நாதாரி” என்கிறார்கள். ” ம…ரு” என்கிறார்கள். அறுவாளை வைத்து “அறுத்துப் புடுவேன்” என பொதுவெளியில் பெண்களே எச்சரிக்கிறார்கள்.

நேற்றைய நிகழ்வுகள், வரலாறு, நாட்டு நடப்புக்கள், சில நேரத்தில் புள்ளி விபரங்கள் விவாதங்களில் அவசியம். இதைபற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல் இன்றைக்குள்ள பிரச்சினை குறித்து கத்தி விவாதிக்கிறார்கள். டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக அவற்றை தொலைக்காட்சியில் அதுவும் நேரலையாக ஒளிபரப்புகின்றன.

இவற்றை வீடுகளில் பார்க்கிறவர்கள் அன்று பேசப்படும் விஷயம் குறித்து என்னவொரு மெய்யாக தெளிவான முடிவுக்கு வர முடியும்? குழப்பமான முடிவகளுக்கே வந்து சேர முடியும். இது விவாதங்கள், பொழுது போக்கு Tel Serials அல்ல.

இங்கு, காலையில் செய்தித்தாள் வாசிப்பது இப்போது வெறும் சடங்காகிவிட்டது. நெட்ஃபிளிக்ஸில் மூழ்கிவிடுகிறார்கள், ஐபிஎல் கிரிக்கெட்டில் பொழுதைப் போக்குகிறார்கள்.

நாட்டில் என்ன நடக்கிறது என்கிற அக்கறை இல்லாமல் அனைத்து வர்க்கத்தினரும் தாங்களாகவே ஒதுங்கிவிட்டதைப் போலத் தோன்றுகிறது. இப்படி இருக்கிறது பொது வெளியின் நிலை.

இன்றைய தொலைக்காட்சி விவாதச் சூழலைப் பார்க்கும்போது, ”மீண்டும் முகம் பார்த்துப் பேசவேண்டியிருக்குமே என்ற ஒரே காரணத்திற்காகவே பொறுமையாக நம்முடைய கோபங்கள் மௌனமாக மாறுகிறது” என்பது நினைவில் வருகிறது.

இதற்குத் தானா தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கின்றன?

இதை எல்லாம் பரிசீலிக்கும் பட்சத்தில் என்னைப் போன்றவர்கள் ஏன் தொலைக்காட்சி விவாதங்களைத் தவிர்க்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

You might also like