தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் துணை சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 5 சதவீதம் பேர் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தற்போது பரவும் கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்றாலும், கட்டுப்பாடுகள் தேவையில்லை எனவும், முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

தினமும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு இருந்தாலோ, அல்லது தொற்று காரணமாக 40 சதவீதத்துக்கும் மேல் மருத்துவமனைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டாலோ மட்டுமே கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும்,

ஆனால் தற்போது அதுபோன்ற நிலை இல்லை என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் மா.சுப்பிரமணியன் அப்போது குறிப்பிட்டார்.

You might also like