மீண்டும் கொரோனா அதிகரிக்கிறதா?

– சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் கலந்துரையாடினார்.

அதன்பின் கொரோனா பரவல் குறித்து விளக்கமளித்த அவர், “கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்துள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக ஒருவர் கூட கொரோனாவுக்கு சிகிச்சை பெறவில்லை. மொத்தமாக தற்போது 20 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 98.7 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமான பிறகு, பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த ஒத்துழைக்கவில்லை. அந்தவகையில் 48 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அதேபோல, 1.37 கோடி பேர் 2 வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை.

30 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், வட மாநிலங்களில் சில இடங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

டெல்லியில் நாள் ஒன்றுக்கு 300 என கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் 2.7 சதவீதம் என அதிகரித்துள்ளது.

எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வெயில் காலம் வந்துள்ளதால் பொதுமக்கள் அதிக நேரம் வெளியே நடமாடுவதைக் குறைக்க வேண்டும்.

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. நிபுணர்கள் பலர் கொரோனா குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று 4 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதற்கு முந்தைய நாள் 2 ஆயிரத்து 800 பேர் செலுத்தியுள்ளனர். அந்தவகையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வது நல்லது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பொறுத்தவரையில் 18.90 லட்சம் பேர் தடுப்பூசி போட தகுதியானவர்கள் இருக்கும் நிலையில், தற்போது வரை 8.49 லட்சம் பேர் தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள்” என்று தெளிவுபடுத்தினார்.

You might also like