பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி!

சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.பிரியா மேயராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதனால் இந்த ஆண்டு (2022-2023) வரவு-செலவு திட்டக் கணக்கை மேயர் முன்னிலையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் நரேந்திரன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:

*சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் இருக்கும் தெரு பெயர்கள், சாலை பெயர்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும். இதற்கு 8.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*சென்னையில் வார்டு மேம்பாட்டு நிதி ரூபாய். 30 லட்சத்தில் இருந்து ரூபாய் 35 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளுக்கு ரூபாய் 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படும். அதேபோல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும்.

*தன்னார்வலர்கள் உதவியுடன் அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..

*மாணவிகளுக்கு நிர்பயா நிதி உதவியின் கீழ் சானிடரி நாப்கின்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*வீடற்றவர்கள் தங்குவதற்காக புதிதாக 3 காப்பகங்கள் உருவாக்க ரூ2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மனநலம் பாதித்து சாலையில் திரிபவர்கள் தங்குவதற்கும் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

*சென்னை 2.0 திட்டத்தில் மாநகரை அழகுபடுத்த 26 இடங்களில் நீரூற்றுகள் அமைக்க ரூ.1.29 கோடி ஒதுக்கீடு

*சென்னை மாநகராட்சி குப்பைகளை சேமிக்க பேட்டரியில் இயங்கும் மேலும் 795 வாகனங்களை வாங்கப்படும். மறுசுழற்சி செய்ய முடியாத 2,600 மெட்ரிக் டன் குப்பைகளை பதப்படுத்தி, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். 54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.

*சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல்நலக் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 16,500 நெகிழி குப்பை தொட்டிகள் ரூபாய் 2.90 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

*சென்னை மாநகராட்சியில் புதிதாக மூன்று டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும்; படிப்படியாக அனைத்து மண்டலங்களில் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

*சென்னை மாநகராட்சியில் e-office அறிமுகப்படுத்தப்படும். இதன் வாயிலாக வரும் காலங்களில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க இயலும்

*சென்னையில் மணலி ஏரி, சாத்தாங்காடு குளம், சடையன் குப்பன் குளம், மாதவரம் பெரிய ஏரி, அண்ணா நெடுஞ்சாலை குளம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணி, ரூ.143 கோடி மதிப்பீட்டில், இந்திய அரசின் அம்ருட் 2.0 திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

*. மாற்றுத்திறனாளிகளுக்காக கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்கும் பணிக்கு ரூ.1.14 கோடி பெறப்பட்டுள்ளது; இந்த பணிகள் துவங்கப்பட்டு 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டும்

*சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

*சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும். அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில மொழி பேசும் பயிற்சி அளிக்கப்படும்.

*சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு ரூ.4.62 கோடி ஒதுக்கீடு.மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் ரூ. 80 லட்சம் செலவில் நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம்

*பொதுமக்கள் எளிமையான முறையில் சொத்து வரி செலுத்துவதற்காக QR குறியீடு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.

*டிஜி லாக்கர் வழியாக வர்த்தக உரிமங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம். சென்னையில் உள்ள பூங்காங்கள் மற்றும் விளையாட்டு திடல்களை பராமரிக்கவும் மேம்படுத்தவும் ரூ.16.35 கோடி ஒதுக்கீடு.

*. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் இணைய தள இணைப்பு ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும், இதற்கு 1.86 கோடியில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.

You might also like