ஜூன் 13-ல் அனைத்து வகுப்புகளும் தொடங்கும்!

– பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்.

நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதிவரை நடைபெறுகிறது.

அதன்படி, 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ம் தேதி ஆரம்பித்து 31-ம் தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு மே மாதம் 6-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.

இதுதவிர 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13-ம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13-ம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது.

You might also like